அதியமான்,மலையமான்-- கள்ளர் குல மன்னர்கள்

கள்ளர் குல மன்னர்கள்-----அதியமான் நெடுமிடல் என்பவன் சங்ககாலத்தில் தகடூரை ஆட்சி செய்த குறுநில மன்னரான அதியர் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவனே அதியர் மரபின் முதல் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நெடுமிடல் என்பது அரசனின் இயற்பெயர் எனச் சிலர் கருதுவர் வேறு சிலர் இது நெடிய வலிபொருந்திய என்னும் பொருள் குறிக்கும் ஒரு அடைமொழி என்பர்.
இம்மன்னனைப் பற்றிய தகவல்கள் சங்க இலக்கியங்கள் மூலமே தெரிய வருகின்றன. சங்க நூல்களான பதிற்றுப்பத்து, குறுந்தொகை என்பவற்றில் உள்ள பாடல்களில் நெடுமிடலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தைப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்பார், சேர மன்னனைப் புகழ்ந்து பாடும்போது இம்மன்னனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னனுடன் இடம்பெற்ற போரில் நெடுமிடல் இறந்தது தெரிய வருகிறது. பசும்பூட் பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் நண்பனான நெடுமிடல் பாண்டியனுக்குச் சார்பாகவே சேர மன்னனுடன் போரிட்டதாகக் கூறப்படுகின்றது.
அதியமான் பொகுட்டெழினி என்பவன் சங்ககாலத்தில் தகடூர் நாட்டை ஆண்ட ஒரு குறுநில மன்னன். அதியமான் மரபைச் சேர்ந்த இம்மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன். இவனது தந்தையைப் பாடிய ஔவையார், அரிசில்கிழார் போன்ற புலவர்கள் இவனையும் பாடியுள்ளனர். இவனும் வீரத்திலும், கொடைச் சிறப்பிலும் புகழ் பெற்று விளங்கியது மேற்படி புலவர்களுடைய பாடல்கள் மூலம் தெரிகிறது.
அதியமானுக்கும் சேர மன்னனுக்கும் நிகழ்ந்ததாக இலக்கியங்கள் கூறும் தகடூர்ப் போர் இவனுக்கும் சேரனுக்கும் இடையிலேயே நிகழ்ந்ததாகக் கூறுவாரும் உளர். இப்போரில் இறந்தவன் பொகுட்டெழினியே அன்றி நெடுமான் அஞ்சி அல்ல என்கின்றனர் இவர்கள். இப்போர் பற்றி விபரிக்கும் தகடூர் யத்திரை என்னும் நூல் முழுமையாகக் கிடைக்காததால் இது குறித்துத் தெளிவான முடிவு எதுவும் இல்லை. இந் நூலிலிருந்து இது வரை கிடைத்த பாடல்கள் எதிலும் மன்னர்களின் இயற் பெயர்கள் இடம்பெறவில்லை.
இம்மன்னனே சங்ககால அதியர் மரபின் கடைசி மன்னன் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.
அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்ககாலக் குறுநில மன்னர்களுள் ஒருவன். அக்காலத்து அதியமான்களுள் இவனைப் பற்றியே அதிக தகவல்கள் தெரியவருகின்றன. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புக்கள் கணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. ஔவையார், அஞ்சியத்தை மகள் நாகையார், பரணர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்திரனார், மாமூலனார் ஆகியோர் பாடிய பாடல்களில் இவனைப் பற்றிய தகவல்கள் உள்ளன.
அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்; சேரன் சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இவனது அரண்மனை இல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையது என்றும் பாடல்கள் அவனைப் புகழ்கின்றன. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்தான் என்றும் அவனது கொடையின் திறம் பேசப்படுகிறது.
அக்காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக் காரி என்பவனுடன் போரிட்டு அவனது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாகச் சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தான். சோழ மன்னனும், பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர் எனினும் அஞ்சி இப்போரில் தோற்று இறந்தான். இப் போரை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பது. இந்நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை.
மேற்படி இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. "சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி" என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் அதியமான்கள். இவர்கள் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்கனி அதியமானுக்கு கிடைத்த போது அதை தான் உண்ணாமல் ஔவையாரின் சேவைகருதி அவருக்கு கொடுத்தான். இந்த அதியமானால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக அறியப்படுகிறது. இக் கல்வெட்டு அதியமானை ஸதியபுதோ என்றும் குறிப்பிடுகிறது.
கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில், தன் நாட்டுக்கு வெளியேயுள்ள சத்தியபுத்திரர் ஆளும் நாடுபற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும் என்று சிலர் கருதுகிறார்கள்.
மலையமான் சேர நாட்டு குறுநில மன்னர்கள் வம்சத்துள் ஒன்றாகும். அதில் மலையமான் திருமுடிக்காரி என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவன். இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன்.
திருக்கோயிலூருக்கு அருகே இருக்கும் பண்டையகால குன்று கபிலர் குன்று. சங்க காலத்தில் மலையமான் குல மரபினர் இந்தப் பகுதியை ஆண்டு வந்ததாக இலக்கியங்கள் கூறுகிறது. சங்ககால புலவரான கபிலர் வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் ஆவார். பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள் பாரியையும், பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர். தன் பெண்மக்கள் இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை நீத்தார்.
நண்பரின் இழப்பை தாங்கமுடியாத கபிலர் அந்த இருகுழந்தைகளையும் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்படைத்து விட்டு ஒரு குன்றின் மீது உயிர்விட்டதாக திருக்கோயிலூர் வீரட்டானத்தில் உள்ள இராசராசன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது
இராசராசனின் தாய் வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக் கோயிலில் வைக்கப்பட்டது.


Comments

  1. வரலாற்றில் மலையமான்கள், (நா. முரளி நாயக்கர்)
    =================================================


    சேரர்களின் கிளை மரபினர்களாக மலையமான்கள் குறிப்பிடப்படுகிறார்கள். சேரர்கள் சங்ககால இலக்கியங்களில் தங்களை "மழவர்" என்றே குறிப்பிட்டுள்ளார்கள். கொல்லி மழவர் வல்வில் ஓரி, மழவர் பெருமகன் அதியமான் மற்றும் மலையமான்கள் சேரர்களின் கிளைப்பிரிவினர்கள் ஆவர். சேரர்கள் "வன்னியர்கள்" ஆவர். வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம், பேரூர் புராணம் மற்றும் பிற்காலச் செப்பேடுகள் சேரர்களை "அக்னி குலம்" என்றே குறிப்பிடுகிறது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட, பாண்டிய பெருவேந்தர் காலம் என்ற நூலில் "பள்ளிகள் க்ஷத்ரியர்கள் என்றும் சேர குல அரசர் குலசேகர ஆழ்வார் வழிவந்தவர்கள்" என்றும் தெரிவிக்கிறது. சேரர் குலத்தில் அவதரித்த குலசேகரப் பெருமானார் அவர்கள் யது வம்சத்தில் திருஅவதாரம் செய்த கிருஷ்ண பகவானைக் குழந்தைப் பருவத்தில் தாதிகள் சொல்லும் பாவனைபோல "எந்தன் குலப்பெருஞ்சுடரே" என்றும் "நந்தகோபன் அடைந்த நல்வினை நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே" என்றும் அவர் (குலசேகரர்) அருளிச்செய்த "நாலாயிர திவ்ய பிரபந்தம்" பாசுரத்தில், ஆலைநீள் கரும்பு என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள். கி.பி. 1283-ஆம் ஆண்டில் கேரளாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் "யாங்-திங்-பி" (Yang Ting-pi), சேரர் குலத்து கொல்லம் அரசர்களை "வன்னி" என்றும் "பன்னாட்டார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். சேரமான் பெருமாளுக்கு முடிசூட்டுதல் விழாவில் வேளாளர்கள் கலந்து கொண்டதை பற்றி "வெள்ளாளர்களின் கொங்கு ஆவணம்" குறிப்பிடுகிறது. அது:-

    "நற்குடி நாற்பத்தெண் ணாயிரங் கோத்திர நாட்டவர்கள்
    பொற்கிரீ டந்தனைச் சாற்றவந் தார்புவிக் காவலனாம்
    அக்கினி கோத்திரன் புகழ்சேர மான்பெரு மான்றனுக்கு
    வைக்கவும் வந்திடும் வேளாளர் வாழ்கொங்கு மண்டலமே.

    எனவே "சேரர்கள் வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது முற்றிலும் உண்மையாகும். அத்தகைய சேரர்களின் கிளை மரபினர்களே "மலையமான்கள்" ஆவர்.

    வன்னிய சமுகத்தை சார்ந்த மலையமான்கள் தங்களை "வன்னியர்" என்றும் "பள்ளி" என்றும் கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டம், அரூர் மற்றும் செங்கம் கல்வெட்டுகள், "வன்னியநார் ஆன மானாபரணச் செதியராயர்" என்றும் "வன்னியநாயன் செதிராயனென்" என்றும் "பெரிஉடையான் அம்மட்டாழ்வார் வந்னிய மக்கள் நாயன் கரிகாலசொழ ஆடையூர் நாடாழ்வானென்" என்றும் குறிப்பிடுகிறது. மலையமான்களின் தலைநகரான திருக்கோவலூர் கல்வெட்டுகள் அவர்களை "வன்னிய மலையமான்" என்றும் "வன்னிய தேவேந்திர மலையமான்" என்றும் "ராஜ ராஜ சேதிராயன் வன்னியநாயன்" என்றும் "கிள்ளியூர் மலையமான் பெரிய உடையான் இறையூரான் சற்றுக்குடாதான் வன்னிய நாயன்" என்றும் குறிப்பிடுகிறது. குறிப்பாக "வன்னிய நாயன் சற்றுக்குடாதான்" தன்னை 25-ற்கும் மேற்பட்ட கல்வெட்டில் "வன்னிய நாயன்" என்றே குறிப்பிட்டுள்ளான். இம் மன்னனைப் போலவே சம்புவராயர் மன்னர்களும், நீலகங்கரைய மன்னர்களும் தங்களை "வன்னிய நாயன்" என்றே சோழர் காலத்திய கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். சங்க காலத்தில் குறிப்பிடப்பட்ட "மழவர் பெருமகன்" என்பதும் சோழர்கள் காலத்தில் வழங்கப்பட்ட "வன்னிய நாயன்" என்பதும் ஒரே பொருளை உடையதாகும். அதாவது "வன்னித் தலைவன்" என்பதாகும். மழவர்கள் வன்னியர்கள் ஆவர். கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தருமபுரி கல்வெட்டு "வன்னியர்களை மழவர்" என்று குறிப்பிடுகிறது. "மழவூர்" என்ற ஒரு நாடு அக் காலக்கட்டத்தில் தருமபுரியில் இருந்ததை அக் கல்வெட்டு மேலும் குறிப்பிடுகிறது. பிற்கால அதியமான்கள் தங்களை கி.பி.14-ஆம் நூற்றாண்டில் "திரிபுவன மல்ல பூர்வ அதியரையர்கள்" என்று "கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்" குறிப்பிடப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவரது மகனை "பள்ளி" என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. அது :-

    "திரிபுவன மல்ல புர்வாதிய குமரனானச் சிக்கரசிறுப்
    பிள்ளைகளில் சொக்கந் கருவாயன்
    பள்ளி இடுபூசலில் குதிரை குத்திபட்டான்"

    (பொருள் : அதியமான் மரபின அரசன் குமரனானசிக்கரனின் கடைசிப் பிள்ளையான 'சொக்கன் கருவாயன் பள்ளி' இடுபூசலில் குதிரைக்குத்தி இறந்துள்ளான்).

    (Cont'd.......)

    ReplyDelete
  2. மேலும் தருமபுரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், ஆம்பள்ளி என்ற ஊரில் உள்ள கல்வெட்டில் :

    "ராஜராஜ அதியமானர் விடுகாதழகிய பெருமாள்
    பள்ளிகளில் கங்க காமிண்டன் கட்டிய குட்டையைப்
    பள்ளிச் சாந்தமாகக் காக்கன் கிளை விடுகாதழகிய
    பெரும்பள்ளியாழ்வார்க்கு "

    என்னுடைய குருநாதர், தொல்லியல் மேதை திரு. நடன. காசிநாதன் ஐயா அவர்கள், மேற்குறிப்பிட்ட கல்வெட்டிற்கு பொருள் தந்துள்ளார்கள். அது :-

    "ராஜ ராஜ அதியமானின் உறவினர்களில் (பள்ளிகளில்) கங்க காமிண்டர்கள் இருந்துள்ளார்கள்" என்று ஐயா அவர்கள் பொருள் தந்துள்ளார்கள். எனவே "மழவர்களான அதியமான்கள் வன்னியர்கள்" ஆவர்.

    திருக்கோவலூர் வட்டம், ஜம்பை கல்வெட்டு, "பள்ளிச்சேரியடிய நம்பியான கோவலரையப் பேரையன்" என்ற மலையமான் பற்றி தெரிவிக்கிறது. வன்னியர் வாழ்விடத்தை (பள்ளிச்சேரி) குறித்துள்ளமையால் இம் மலையமான் "பள்ளி" என்பது பெறப்படுகிறது. சோழர் காலத்தில் "பிராமணர் வாழ்விடத்தையும் சேரி" என்றே கல்வெட்டில் வழங்கப்பட்டிருக்கிறது. செஞ்சி வட்டம், சிங்கவரம் கல்வெட்டு "பள்ளிக்கட்டுச் செதிராயன்" என்று குறிப்பிடுகிறது. இவன் வன்னிய சமூகத்தவன் என்பதை "ஸ்ரீ மதுராந்தகச்சதுர்வெதி மங்கலத்துப் பிடாகையாந மதுவூற் குடிப்பள்ளி சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதெவனாந பள்ளிக்கட்டு மும்மலராயன்" என்ற செய்யார் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. இச் செதிராயன் (மலையமான்) "பள்ளி இனக் குழுவை" (பள்ளிக்கட்டு) சேர்ந்தவன் என்பதை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. மேலும் "மும்மலராயன்" என்பது "மலையமான்களைப் குறிப்பதாகும். சாமந்தன் என்பது அரசனைக் குறிப்பிடும் பதமாகும்.

    மலையமான் வன்னிய மன்னர்களுக்கும் காடவராய வன்னிய மன்னர்களுக்கும் இருந்த திருமண உறவை திருக்கோவலூர் வட்டம், திருவெண்ணைநல்லூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் "கவிச்சக்ரவர்த்தி கம்பர் எழுதிய சிலைஎழுபது" என்ற நூலில் "மலைய மன்னர்" என்று மலையமான் அரசர்களை வன்னிய சமூகத்தவர்களாக குறிப்பிடுகிறது.

    மேற்சொன்ன உறுதியான சான்றுகள் மூலம், சேரர்களின் கிளை மரபினர்களான மலையமான்கள், "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது உறுதியாகிறது.

    --------------- x --------------- x ---------------

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்