பறவை நாச்சியார்

அவள் பெயர் பரவை, சுந்தரரின் மனைவி பெயரையே கொண்டவள். திருவாரூர் தியாக விடங்கர் (தியாகராஜர்) கோயிலில் தொண்டு புரிந்து வந்தவள். இவளின் பேரழகும், சைவத் தொண்டுகளும் மாமன்னன் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனை மிகவும் கவர்ந்தன. எத்தனை போரில் ஈடுபட்டு, எத்தனை உயிர்களை பரித்தவனாக இருந்தாலும் அவனும் ஆண் தானே? உடனே அவளை காதலிக்கத் துவங்கினான் ராஜேந்திரன். பல நூறு வருடங்களாக செங்கல் கட்டுமானமாகவே இருக்கும் திருவாரூர் கோயிலை கற்றளியாக மாற்ற வேண்டும் என்பது பரவையின் ஆசை, இதை ராஜேந்திரனிடன் கூறுகிறார் பரவை.  அவளை மிகவும் நேசித்த ராஜேந்திர சோழன் அவளின் வேண்டு கோளுக்காகத் தியாகராஜரின் திருக்கோயிலைக் கருங்கல் கொண்டு எடுத்து கற்றளியாகப் புதுப்பிக்கிறான். அவனின் 16-18ம் ஆண்டுகளில் வீதிவிடங்கனின் கோயில் கற்கோயிலாக மாற்றப்பெற்றது. கற்றளி மட்டும் போதாது, இந்த கோயிலை பொற் கோயிலாகவே மாற்ற வேண்டும் என்று பரவை ராஜேந்திரனிடம் கேட்டாள். காதலி பேச்சுக்கு மறு பேச்சு ஏது?

உடனே ராஜேந்திரன் கோயிலை உள்ளும் புறமும் தங்கத்தகடுகள் போர்த்தி அழகு செய்தான். முகமண்டபம், தூண்கள் ஆகியவற்றை செம்புத் தகடுகளால் அலங்கரித்தான். 18ம் ஆட்சியாண்டின் 38ம் நாள் தொடங்கி 199ம் நாளில் பொன்தகடுகளும், செப்புத் தகடுகளும் பொருத்தும் வேலை பூர்த்தியடைகின்றது. அவற்றோடு அவன் நிற்கவில்லை. பரவை வேண்டிய வண்ணம் எண்ணிலடங்கா மணிகள் பதிக்கப்பெற்ற அணிகலன்களைத் தியாகேசருக்கு அளித்து  அப்பெருமானின் பேரழகைத் தரிசித்தான்.

20ம்  ஆட்சியாண்டில் (கி.பி.1032) மாமன்னர் ராஜேந்திர சோழன் தன காதலி பரவையாருடன் திருவாரூர் திருவீதிகளில் அரசு தேரில் அவளை அமரவைத்து ஊர் முழுவதும் பவனி வருகிறான். பவனிவந்து கோயிலுக்கு நுழைந்து காதலர்கள் இருவரும் தியாகேசப்பெருமானை ஒரு இடத்தில நின்று வணங்குகின்றனர். அவர்கள் இருவரும் நின்று ஈசனை வணங்கிய இடத்தில் அதன் நினைவாக விளக்கு ஒன்றை வைக்குமாறு ராஜேந்திரன் உத்தரவிடுகிறான். அந்த கல்வெட்டு இன்னும் அந்த கோயிலில் உள்ளது

‘உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவரும் அனுக்கியார் பறவை நங்கையாரும் நிற்குமிடன் தெரியும் குத்துவிளக்கொன்றும்...’

அதோடு முடிந்துவிடவில்லை அவர்களின் காதல். இன்றைக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தால் "பனையபுரம்" என்ற ஊரை நாம் கடப்போம், அந்த ஊரின் அன்றைய பெயர் "பரவைபுரம்". ராஜேந்திர சோழன்  காலத்தில் அந்த ஊருக்கு அந்த பெயர் கிடைக்கின்றது, இறைவன் பெயர் பரவை ஈஸ்வரமுடையார்! காதலின் சின்னமாகத் தாஜ்மஹாலைக் கூறுகிறோம். இறந்து போன தன் காதலிக்கு எழுப்பிய சமாதியல்ல அந்த கோயில். அவள் உயிருடன் இருக்கும்போதே தன் உண்மைக் காதலை அவள் கண்டு களிக்குமாறு அழியாக் கோயில் கட்டியவன் இராஜேந்திரன். இதை எல்லாம் செய்து முடித்த பின் ராஜேந்திரன் இறந்துவிடுகிறான், தான் கேட்டதை எல்லாம் செய்த தன் காதலன் நினைவாக தானும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று திருவாரூர் கோயிலில்  'இராஜேந்திர சோழன் திருமண்டபம்' என்று ஒரு மண்டபத்தை எழுப்புகிறாள் பரவை! காலம் கடக்கின்றது ஒரு நாள் பரவையும் இறந்து போகிறாள்..... ராஜேந்திரனின் புதல்வனான முதலாம் ராஜாதிராஜன்  தன் தந்தையாருக்கும், பரவை நங்கையாருக்கும் ஒரு சேர நிற்கும் திருவுருவச் சிலை (படிமங்கள்) எடுத்து திருவாரூர் கோயிலிலேயே பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய வகை செய்கிறான், இன்றைக்கும் அந்த கோயிலின் இரண்டாம் பிராகாரத்தின் வடமேற்கு திசையில் அமைந்துள்ள ஆனந்தேசம் என்னும் சிறிய உட்கோயிலின் மாடத்தில் சென்று பார்த்தால் ராஜேந்திர சோழனின் உருவச்சிலையும்,  பரவைநாச்சியாரின் உருவச் சிலையும் இன்றும் வழிபாட்டில் திகழ்வதைக் காணலாம். அவனுக்கு பின் ஆட்சிக்கு வரும் அவன் தம்பி இரண்டாம் ராஜேந்திரன் தன் தந்தைக்கும் பரவைக்கும் திருமேனிகள் எடுத்துப் பரவைபுரத்தில் பரவை ஈஸ்வரமுடையார் ஆலயத்தில் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கும் திருவிழாவிற்கும் நிவந்தங்கள் அளித்திருக்கின்றான்... இந்த இரு கோயில் கருவறை கற்களையும் தொட்டுத் தடவிப் பாருங்கள், கடல் கடந்து பல தேசங்களை ஆண்ட மாமன்னன் ராஜேந்திரனின் காதல் உங்கள் இதயத்தை கனக்கும், சுவரில் இருக்கும் ஒவ்வொரு வரி கல்வெட்டுகளும் நம் கண்களில் நீரை மெல்ல கசியவிடும், நம் இதயம் நம்மிடம் பேசத் துவங்கும்... திருவாரூர் தியாகராயர் உள்ளவரை, பரவை ஈஸ்வரர் உள்ள வரை, காதல் அழியாது!!




Comments

  1. எவ்வளவு அழகான வரலாற்று விஷயம் . மிக அருமையான தொகுப்பு .
    மிக்க நன்றி .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்