திரு ஆலங்காடு

திரு ஆலங்காடு
***
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே;
ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே;
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே;
நீர், வளி, தீ, ஆகாசம், ஆனார் தாமே;
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே;
கோலப் பழனை உடையார் தாமே;
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே.

மலைமகளைப் பாகம் அமர்ந்தார் தாமே;
வானோர் வணங்கப்படுவார் தாமே;
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே;
சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே;
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே;
பழனை பதியா உடையார் தாமே;
சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே.

ஆஉற்றஐந்தும் உகந்தார் தாமே;
அளவு இல் பெருமை உடையார் தாமே;
பூ உற்ற நாற்றம்ஆய் நின்றார் தாமே;
புனிதப் பொருள்ஆகி நின்றார் தாமே;
பா உற்ற பாடல் உகப்பார் தாமே;
பழனை பதியா உடையார் தாமே;
தே உற்று அடி பரவ நின்றார் தாமே
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே.

நாறுபூங்கொன்றை முடியார் தாமே;
நால்மறையோடு ஆறுஅங்கம் சொன்னார் தாமே;
மாறு இலா மேனி உடையார் தாமே;
மா மதியம் செஞ்சடைமேல் வைத்தார் தாமே;
பாறினார் வெண்தலையில் உண்டார் தாமே;
பழனை பதியா உடையார் தாமே;
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே.

அல்லும் பகலும்ஆய் நின்றார் தாமே;
அந்தியும் சந்தியும் ஆனார் தாமே;
சொல்லும் பொருள்எலாம் ஆனார் தாமே;
தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே;
பல்உரைக்கும் பாஎலாம் ஆனார் தாமே;
பழனை பதியா உடையார் தாமே;
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே.

தொண்டுஆய்ப் பணிவார்க்கு அணியார் தாமே;
தூ நீறு அணியும் சுவண்டர் தாமே;
தண்தாமரையானும் மாலும் தேட,
தழல்உருஆய் ஓங்கி, நிமிர்ந்தார் தாமே;
பண்தான் இசை பாட நின்றார் தாமே;
பழனை பதியா உடையார் தாமே;
திண்தோள்கள்எட்டும் உடையார் தாமே
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே.

மை ஆரும் கண்டம்-மிடற்றார் தாமே;
மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே;
ஐயாறும், ஆரூரும், ஆனைக்காவும்,
அம்பலமும், கோயிலாக் கொண்டார் தாமே;
பைஆடுஅரவம் அசைத்தார் தாமே;
பழனை பதியா உடையார் தாமே;
செய்யாள் வழிபட நின்றார் தாமே
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே.

விண்முழுதும் மண்முழுதும் ஆனார் தாமே;
மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே;
கண் விழியாக் காமனையும் காய்ந்தார் தாமே;
காலங்கள், ஊழி, கடந்தார் தாமே;
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே;
பழனை பதியா உடையார் தாமே;
திண் மழுவாள் ஏந்து கரந்தார் தாமே
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே.

கார் ஆர் கடல்நஞ்சை உண்டார் தாமே;
கயிலைமலையை உடையார் தாமே;
ஊர்ஆக ஏகம்பம் உகந்தார் தாமே;
ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே;
பாரார் புகழப்படுவார் தாமே;
பழனை பதியா உடையார் தாமே;
தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே.

மாலைப் பிறை சென்னி வைத்தார் தாமே;
வண் கயிலைமாமலையை வந்தியாத,
நீலக்கடல் சூழ், இலங்கைக் கோனை
நெரிய விரலால் அடர்த்தார் தாமே;
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே;
பழனை பதியா உடையார் தாமே;
சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்