27_நட்சத்திரங்களுக்கும் #ஒரே_பரிகார_தலம்

#27_நட்சத்திரங்களுக்கும்
#ஒரே_பரிகார_தலம்

தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகனுக்கு அகிலம் எல்லாம் எண்ணற்ற திருத்தலங்கள்.

குன்றிருக்கும் இடமெல்லாம் முருகனின் திருமாளிகைகள்தான். ஆனாலும், அவற்றிலெல்லாம் வேறுபட்டு, தனித்தன்மைமிக்க திருத்தலமாக நட்சத்திர கிரி சுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது.

வளத்தாலும், வனத்தாலும் எழில்பொங்கும் ஜவ்வாது மலையில் பிரவாகமாகி, வங்கக்கடலில் சங்கமமாகும் செய்யாற்றின் கரையோரமாக இக்கோயில் உள்ளது.

மலையே மகேசனாக அருள்தரும் திருவண்ணாமலையில் கலசப்பாக்கம் அருகே வில்வாரணி நட்சத்திரகிரியின் மலையின் நாயகனாக வள்ளிதெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி  அருள்பாலிக்கிறார்.

முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட இக்கோயில் கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சி தருகின்றனர்.

 27 நட்சத்திரங்களும், சிவ சர்ப்பமும், முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு இந்த கோயிலை தவிர வேறெங்கும் இல்லை.

 வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து, நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க கோயில். எனவேதான் இக்கோயிலுக்கு நட்சத்திர கிரி கோயில் எனும் சிறப்பு பெயரும் வந்தது.

27 நட்சத்திரங்களுக்கும் பரிகாரத் தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. இக்கோயில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காஞ்சிபுராணம், அருணாச்சல புராணம் ஆகியன இக்கோயிலின் ஆன்மிக வரலாற்றை விளக்குகின்றன.

ஒரு சமயம் முருகப்பெருமான், வாழைப்பந்தலில் இருந்து எய்த அம்பு, பருவதமலை மீது பாய்ந்தது. அப்போது, அங்கு தவமிருந்த சப்தரிஷிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன.

 அதனால் பெருக்கெடுத்த உதிரம் ஆறாக பெருக்கெடுத்து மலையில் இருந்து வழிந்தோடியது. (உதிரம் பெருக்கெடுத்து ஆறாக பாய்ந்ததால் இன்றைய செய்யாற்றுக்கு செய்நதி எனும் பெயரும் உண்டு) சப்த ரிஷிகளின் தலைகளை கொய்ததால் முருகப்பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.

எனவே, செய்நதியின் வடகரையில் ஏழு இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடக்கரையில் ஏழு இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் பூஜித்தால் முருகப்பெருமானுக்கு தோஷம் நிவர்த்தியாகும் என பார்வதிதேவி உபதேசித்தாள்.

அன்னையின் அருளையேற்ற முருகப்பெருமான், செய்நதியின் வலதுகரையில் வில்வாரணி மலையில் குடிகொண்டு  வடக்கரையில் கரைகண்டீஸ்வரரையும், இடதுகரையில் தேவகிரிமலையில் குடிகொண்டு கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

இன்றளவும் இந்த 14 இடங்களிலும் முருகன் வழிபட்ட சிவலாயங்கள் அமைந்திருக்கின்றன.

இந்த 14 சிவாலயங்களையும் இரண்டு சிவாச்சாரியார்கள் வழிபட்டு வந்தனர்.

ஆடிக்கிருத்திகை நாளில் திருத்தணி சென்று முருகப் பெருமானையும் அவர்கள் வழிபடுவர்.

ஒரு வருடம், ஆடிக்கிருத்திகைக்கு திருத்தணிக்கு செல்ல இயலவில்லை.

அதனால், மனம் வருந்தினர். இருவரின் கனவிலும் தோன்றிய முருகன், ‘திருத்தணிக்கு செல்ல இயலவில்லை என வருந்த வேண்டாம், நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் நடுமலையில் சுயம்பு ரூபமாகக் குடியிருக்கிறேன்.

சூரியன், சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும், நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கும்.

எனவே, நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட, என்னை வந்து சேருங்கள்’ எனக்கூறி அருள்புரிந்தார்.

திடுக்கிட்டு விழித்த சிவாச்சாரியார்கள், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் புறப்பட்டு, நட்சத்திரகிரியில் நாகம் வழிகாட்டிய இடத்துக்கு சென்றனர்.

அங்கே, சப்பாத்திக்கள்ளி புதரில் சுயம்பு வடிவாக முருகப்பெருமான் காட்சியளித்தார்.

இத்தலத்தில் சித்திரை பிறப்பு பால்குட அபிஷேகம், ஆடிக்கிருத்திகை பெருவிழா, கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம், தைக்கிருத்திகை விழா, பங்குனி உத்திர பிரம்மோற்சவம், மாதாந்திர கிருத்திகை விழாக்கள் விசேஷமானவை.

கிருத்திகைதோறும் நட்சத்திரகிரியை வலம் வருவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இக்கோயிலின் தல விருட்சமான வில்வமரத்தில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவோருக்கு,

குழந்தைப்பேறு கிடைக்கிறது. திருமணத் தடை நீங்கும். துயரம் தீரும். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரமாண்டமான மலேசிய முருகர் சிலை வழிபடுவோரை வியப்பில் ஆழ்த்துகிறது.

இக்கோயில் திருவண்ணாமலை வேலூர் சாலையில் கலசப்பாக்கத்தில் இருந்து 6 கி.மீ., தொலைவிலும், போளூரில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்