திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார்
கள்ளர் மரபைச் சேர்ந்தவர். திருமங்கை மன்னரின்இயற்பெயர் நீலன். சோழ மன்னனின் சேனைத் தலைவர் ஆலிநாடான் என்பவர்க்கும் மனைவி வல்லித்திருவுக்கும் நள ஆண்டில் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி திதியில் வியாழக்கிழமை அன்று சோழ நாட்டில் திருவாலி திருநகிரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார்.  பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் இருப்பதால் இவரை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடிகிறது.  நீலன் கல்வி கற்க்கும்போதே இலகணப்பிழையின்றி கருத்துச் செறிவுள்ள பாக்களை இயற்றும் ஆற்றலைப்பெற்றிருந்தார். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளில் வல்லவராக விளங்கி நாற்கவி வல்லான் என்ற சிறப்பு பெயரையும் பெற்றார்.
 இளம் வயதிலே போர்த் திறமைகள் பயின்றார். தந்தைக்குப் பின் சோழ மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றார்.
வாள், வில், வேல், ஈட்டி ஆகியபடைக்கலப் பயிற்சியிலும் வல்லவனானார். தேர், யானை, குதிரை, காலால் ஆகிய நால்வகைப் படைகளையும் தலைமை யேற்று பகைவர்களை வென்று சோழ மன்னருக்குபெரும் வெற்றிகளை தேடித்தந்தார். சோழ மன்னர் அகமகிழ்ந்து நீலனை திருவாலி நாட்டிற்க்கு மன்னனாக்கி திருமங்கை என்னும் ஊரை தலைநகராக தந்தான்.
வாணிலா முறுவல், சிறுநுதல் பெருந்தோள் மாதரார்
வனமுறைப் பயனே பேணினேன்...
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்
என்று அழகான புன்னகை, சின்ன நெற்றி, பெரிய தோள்களைக் கொண்ட பெண்களைப் பேணியதற்கு நாணினேன் என்று  பல பாடல்கள் பாடியுள்ளார்.
நீலன்குமுதவல்லியார் என்பவரை மணந்து தன் வாழக்கைப் பயணத்தை தொடங்கினார். தன் கையில்கிடைத்த செல்வத்தை எல்லாம் பாகவதர்கட்கு அமுது படைப்பதிலேயே செலவழித்தார். அரசனுக்கு சேரவேண்டிய வரிப்பணத்தையும் இதற்கே செலவழித்தமமையால் அரசு காவலில் சிறைவைக்கப்பட்டு பின்னர் காஞ்சிப் பேரருளான்வரதராசப்பெருமாள் திருவருளாள் பெரும் பொருள் பெற்று அரசுக்குரிய கப்பத்தை செலுத்தியும் சிறை மீண்டார்.
திருவரங்கப் பெருமாள் நீலனின் வலது காதில் ஓம் நமோ நாராயணா என்னும் திருமந்திரத்தை உபதேசித்து அவரின் ஞானக்கண்ணைத் திறந்து திருவருள் காட்டினார். நாராயணன் அவர் காதில் அஷ்டாக்ஷரம் எட்டு எழுத்துக்கள் கொண்ட ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தைச் சொல்ல ஆழ்வார் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்க்க நாராயணன் தன் திரு உருவில் மனைவியுடன் கருடன் மேல் தரிசனம் தர அவருடைய அஞ்ஞான இருள் அகன்றது. அப்போது அவர் பாடிய பாசுரம்:
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே
திருமங்கை மன்னனின் வாழ்வின் வீச்சும் கவிதையின் வீச்சும் அவரின் மகிமையைச் சொல்கின்றன.
நிறைய சம்பாதித்தார், நிறைய அனுபவித்தார், நிறைவாக வாழ்ந்தார், காதலித்தார். முதலில் பெண்களை, பின்பு திருமாலை. எல்லா வகைப் பாடல்களையும் முயன்று அருமையான கவிதைகள் படைத்தார். பல கோவில்களைச் செப்பனிடத் திருப்பணிகள் செய்வித்தார். எல்லாவற்றையும்விட  திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் உள்ள கம்பீரம் நம்மை பிரமிக்க வைக்கும்.
பெரிய திருமடலில் விஷ்ணுவுக்கு ஏற்பட்ட பல ஊர்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறார். 220ம் வரியிலிருந்து வரிசையாக ஒவ்வொரு ஊரையும் அழகாகச் சொல்கிறார்.
அந்த ஊர்கள்:
திருவிண்ணகர்,
குடந்தை,
திருக்குறுங்குடி,
திருச்சேறை,
திருவாலி,
திரு எவ்வளூர்,
திருக்கண்ணமங்கை,
திருவெள்ளறை,
திருப்புட்குழி,
திருவரங்கம்,
திருவல்லவாழ்,
திருப்பேர்நகர்,
திருக்கோவிலூர்,
திருவழுந்தூர்,
தில்லைச் சித்திரக்கூடம்,
திருவேங்கடம்,
திருமாலிரும்சோலை,
திருக்கோட்டியூர்,
திருமையம்,
திரு இந்தளூர் கச்சி,
திருவேளுக்கை,
திருவெஃபா,
திருவிடவெந்தை,
கடல்மல்லை,
திருத்தண்கா,
ஊரகம்,
அட்டபுயகரம்,
திருவாதனூர்,
திருநீர்மலை,
திருப்புல்லாணி,
திருநாங்கூர்,
திருக்கண்ணபுரம்,
திருநறையூர் மணிமாடக் கோயில்
இவ்வாறு தென்னாட்டில் உள்ள வைணவத் தலங்கள் அனைத்தையும் பட்டியலிட்டுவிடுகிறார்.
ஆழ்வார்களிலேயே மிக அதிகம் அலைந்தவர் திருமங்கை மன்னன்தான். அவரால் பாடப்படவில்லையென்றால் அந்தக் கோயில் பிற்காலத்தது என்று சொல்லிவிடலாம். ஆழ்வார் பாடல்கள் நம் ஆலயங்களின் பழமையை நிரூபிக்கும் சரித்திரச் சான்றுகளாக உள்ளன. இவைகள் எல்லம் இன்றும் உள்ளன. போய்ப் பாருங்கள். எட்டாம் நூற்றாண்டுக்கு உரிய மரியாதையுடன் அவைகளைப் பாதுகாத்திருக்கிறோமா பாருங்கள். வருத்தப்படுவீர்கள். இவைகள் எல்லாம் உலகின் பாரம்பரியச் சொத்து.
திருமங்கையாழ்வார் 108 திவ்விய தேசங்களில் 86 திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்தார். திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிரியதிருமடல், பெரியதிருமடல் என்கிற ஆறுபிரபந்தங்களையும் அருளிச்செய்துள்ளார். திருமங்கையாழ்வார் தம் இறுதிக்காலத்தை தம் மனை வியுடன் திருக்குறுங்குடியில் கழித்தார்.
திருமங்கை ஆழ்வாரின் பிரமிப்பூட்டும் பாடல்களில் இது ஒன்று.
கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாவேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே
காரணமில்லாமல் பல உயிர்களைக் கொன்றேன். என்னிடம் வந்து யாசகம் கேட்டவர்களிடம் இனிமையாக பேசக்கூட இல்லை. வேங்கடப் பெருமானே உன்னை வந்தடைந்து விட்டேன் என்னை ஆட்கொள்வாய்.
கஷ்டத்தில் இருப்பவர்களிடம் இனிமையாகப் பேசினால்கூடப் போதும். அதற்கும் நேரமில்லாமல் பல உயிர்களைக் காரணமில்லாமல் துன்புறுத்தியிருக்கிறேன் என்று தப்பை ஒப்புக் கொள்வதற்கு மிகுந்த மன முதிர்ச்சி வேண்டும்.
பிற்காலத்தில் அருணாகிரிநாதரிடம் இந்தப் போக்கைக் காண முடிகிறது. மற்றொரு பாடலில் ஆழ்வார் தன் வாழ்க்கையின் பொழிப்புரையை இரண்டு வரிகளில் தருகிறார்.
தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
சின்ன வயசில் அறியாமையால் பல தீமைகள் செய்துவிட்டேன், பெரியவனானதும் மற்றவர்க்கு உழைத்து ஏழையாகிவிட்டேன் என்று ஒப்புக்கொள்ள யாருக்கு மனம் வரும்?
------திருமங்கையாழ்வார் [கள்ளர் குல மன்னன்]வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் 'கலியன்'. ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் "திருமங்கை" நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.

(வைணவ)க் காதல்
குமுதவல்லி எனும் மங்கை மீது கொண்ட காதலினால் வைணவம் அனுசரிக்க ஆரம்பித்தவர், அவளின் விருப்பத்தின்படி திருமால் அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்துவரலானார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும், அரசு செல்வங்களையும் முழுக்க இழந்தவரானார். கடமையை நிறைவேற்ற யாசகமும் கைக்கொடுக்காதப்படியால் களவாடியாவது அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருவரங்கத் திருக்கோயிலின் கைங்கரியங்களையும் செய்துவந்தார். இச்செயலை மெச்சி, இறைவனே இவர் களவாடும் பாதையில் வந்து, இவரை ஆட்கொண்டதோடு வேண்டிய செல்வங்களையும் கொடுத்தருளினார்.
இலக்கிய பணி
இவர் 1351 பாடல்கள் பாடியுள்ளார். அவைகளாவன
திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் - 47 அடிகள்)
சிறிய திருமடல் (ஒரு பாடல் - 155 அடிகள்)
பெரிய திருமடல் (ஒரு பாடல் - 297 அடிகள்)
திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்)
திருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்)
பெரிய திருமொழி (1084 பாடல்கள்)

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்