அசோகா செய்முறை ரகசியம்

ருசி ரகசியம் விஜி ராம்

பெயர் சொன்னாலே அதன் மகத்துவம் புரியும்படியான ஊர்களில் முக்கியமானது திருவையாறு. உலகமே கொண்டாடும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகளின் தலம்... திரு+ஐந்து+ஆறு... காவிரியும் அதன் கிளை ஆறுகளான குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகியவையுமாக 5 ஆறுகளாக பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது. சுவையான காவேரி தண்ணீரும், எப்போதும் இசையோடு வீசும் காற்றும் திருவையாறின் இன்னொரு சிறப்பு.

தியாகராஜ ஆராதனை விழா எவ்வளவு பிரபலமோ, அதே அளவு இன்னொரு பிரபலமான விஷயமும் இங்கு உண்டு. அதுதான் திருவையாற்றில் மட்டுமே கிடைக்கும் அசோகா. அல்வா போன்ற இனிப்பு சுவை கொண்ட ஒரு உணவுக்கு இப்படி ஒரு பேரை யோசித்து வைத்ததிலிருந்தே திருவையாற்றின் ரசனை தெரிகிறதே!

அது என்ன அசோகா? தஞ்சை மாவட்ட திருமணங்களில் அவசியம் இடம்பெறும் கண்ணைப் பறிக்கும் சிவப்பு வண்ண இனிப்பு! பச்சை வாழை இலையில் சுடச்சுட ஆவி பறக்கும் அசோகாவை காணும்போதே சுவை சுரப்பிகள் சுறுசுறுப்பாகும். உடலுக்கு மிகவும் உகந்த பாசிப்பருப்பே இதில் முக்கிய சேர்ப்பு. அசோகா விற்பதே பிரதான தொழிலோ என்னும்படி ஊரெங்கும் அல்வா கடைகள் இருந்தாலும், காத்திருந்து உண்டும் வாங்கியும் செல்லும் ரசிகர்களை கொண்ட கடை ஆண்டவர் அசோகா கடைதான்.

காலை 10 மணிக்கு கடை திறக்கும் முன்பே கூட்டம் காத்திருக்கிறது. சுடச்சுட அல்வாவையும் கொசுறாக கொஞ்சம் காரத்தையும் காலை டிபனாக கொண்டு மதிய சாப்பாடாகவும் பார்சல் பறக்கிறது. தியாகராஜ ஆராதனைக்கு வரும் கலைஞர்கள் ஊர் திரும்ப பெட்டி கட்டும்போது மறக்காமல் அசோகா பொட்டலமும் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். திருவையாறு சென்று வருபவர்கள் மட்டும் அன்றி, பேருந்துகளிலும், தூது அஞ்சல்களிலும் அசோகா பயணிக்கிறது. இத்தனை புகழுக்குப் பின்னே என்ன இருக்கிறது? ஆண்டவர் அசோகா கடை உரிமையாளர் கணேசமூர்த்தியிடமே கேட்டு அறிந்தோம்.

ராமைய்யர் என்பவரால் 50 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக தயாரிக்கப்பட்டது இந்த அசோகா. அவர் வாழ்நாள் முழுக்க அசோகாவும் தூள் பக்கோடாவும் சுவையாட்சி செய்து கொண்டிருந்தது. அவர் காலத்துக்குப் பிறகு, அசோகா சிறிது துவண்ட பொழுதில், ஆண்டவர் கடை கணேசமூர்த்தி மறுவாழ்வு கொடுத்திருக்கிறார். ராமைய்யர் வைத்திருந்த அதே இடத்திலேயே இப்போது செயல்படுகிற ஆண்டவர் கடையில், அதே பாரம்பரியத்தோடு அசோகா தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. பாசிப்பருப்பு, கோதுமை மாவு, சர்க்கரை, நெய் ஆகியவற்றின் கலவைக்கு, இத்தனை சுவை வரக் காரணம் காவேரி தண்ணீரும் விறகு அடுப்பும்தானாம்!

இந்த இதழ் ருசி ரகசியத்தில் நம் ஆராய்ச்சி அசோகாவேதான். வழக்கமாக அல்வா எப்படியெல்லாம் இருக்கும்? கேரளாவில் செங்கல் செங்கலாக ஏராளமான வண்ணங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நெல்லையிலோ காபிப்பொடி நிறத்தில் வாழை இலை கருகும் அளவு சூடாக இருக்கும். எதைக் கொண்டு  செய்யப்பட்டது என்று சாப்பிட்டும் கண்டுபிடிக்க முடியாதபடி புதிராகவும் சில இனிப்புக் கடைகளில் வைக்கப்பட்டிருக்கும். பாம்பே அல்வா மற்றும் இன்ன பிற அல்வாக்கள் கண்ணாடி போன்ற பளபளப்புடன் துண்டங்களாக இருக்கும். நம் அசோகாவோ வழுவழுப்பாக, திடமாக என்று எது மாதிரியும் இல்லாத புது மாதிரி. செங்கல் போன்று பல்லை பதம் பார்க்காது... வாழை இலை கருகும் வாசனையும் வராது... கண்ணாடித் தன்மையும் இருக்காது.

வாயில் போட்டால் நேராக வயிற்றிலேயே விழும் அளவு மிருது... மிக லேசான ரவை போன்ற ஒரு பருப்புச் சுவை நாவில் இடறும்... கையிலே ஒட்டாது... வாயில் இட்ட உடனே பாசிப்பருப்பு வாசனை காட்டிக் கொடுக்கும்! சாதாரணமாகவே அல்வா செய்வது கூடுதல் கவனம் தேவைப்படும் வேலை. கை ஒட்டாமல் கிளறுவதும், பதம் தப்பாமல் பிடித்து இறக்குவதும் ஆரம்ப அவஸ்தைகள். எத்தனையோ அல்வா வகைகள் செய்த பயிற்சி இருந்தாலும், அசோகா செய்வது கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. அந்தக்கால சமையல் குறிப்பு புத்தகங்களை படித்தவர்களுக்கு தெரியும்... அந்தப் புத்தகங்களில் உள்ள அளவுகளை புரிந்து கொள்ளவே தனி அகராதி தேவைப்படும் என்று. நம் செய்முறை அப்படி அல்லவே... யார் எப்போது வேண்டுமானாலும் எளிமையாகச் சுவையாக செய்யும் படியான குறிப்பை தரவேண்டுமே...

அசோகாவின் பிரகாசமான ஆரஞ்சு சிவப்பு வண்ணம்தான் அதன் முதல் கவர்ச்சி. அடுத்து வாசனை, சுவை, பதம்... இவை எல்லாமே ஒரு முறையில் வருமா? கண்டிப்பாக வராதுதான். முதன்முறையில் பாசிப்பருப்பை வேக வைத்துக் கிளறியதும், பருப்பு கரைந்து, சரியான பதம் வராமல் போனது. அடுத்த முறை கோதுமை மாவை சரியாக வறுக்காததால், கோந்து போன்ற பதத்தில் வந்தது. முயற்சியில் சற்றும் மனம் தளராமல், மீண்டும் மீண்டும் முயற்சி செய்ததில் கிடைத்தே விட்டது, இதோ... தோழிகளுக்காக எளிமையான அசோகா செய்முறை!

அசோகா செய்முறை ரகசியம்

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு (பயற்றம் பருப்பு) -      ஒரு கோப்பை
கோதுமை மாவு -  ஒரு கோப்பைக்கு 2 மேஜைக்கரண்டி குறைவாக...
மைதா மாவு - 2 மேஜைக்கரண்டி
சர்க்கரை - 3 கோப்பை
நெய் - ஒன்றரை கோப்பை
ஏலக்காய் தூள் - கால் மேஜைக்கரண்டி
முந்திரி - 50 கிராம்
திராட்சை - 20  கிராம்
ஆரஞ்சு கேசரி தூள் - ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

கோதுமை மாவுடன் மைதா மாவை சேர்த்து சலித்து வைக்கவும். பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வெறும் வறு சட்டியில் வறுத்துக் கழுவி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நிதானமான தீயில் வேக விடவும். அடி கனமான இன்னொரு பாத்திரத்தில் ஒரு கோப்பை நெய் விட்டு, அதில் முந்திரி திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும். அந்த நெய்யில் கோதுமை - மைதா மாவு கலவையை சேர்த்து வறுக்கவும். நிதானமான தீயில் கைவிடாமல் கிளறி வறுக்க வேண்டும். ஒரு கட்டத்தில் மாவு பொன்னிறமாகி நன்கு வாசனை வரும். இந்தப் பதத்தில் வேக வைத்த பருப்புச் சேர்த்து கிளறவும். பருப்பு நன்கு மசிந்து மாவுடன் கலக்கும்போது சர்க்கரையையும் கேசரி பொடியையும் சேர்த்து கைவிடாமல் கிளறவும். பாத்திரத்தின் ஓரம் ஒட்டாமல் சுருண்டு, அல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையும், ஏலக்காய் பொடியும், மீதமுள்ள நெய்யும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.  சுவையான அசோகா சிரமமின்றி தயார்!

உங்கள் கவனத்துக்கு...

பமைதாவுக்கு பதில் சர்க்கரை சேர்க்காத கோவா சேர்க்கலாம்.

பகைவிடாமல் கிளற வேண்டும் என்பது எல்லா வகை அல்வாக்களுக்குமே பொதுவானது. கட்டி தட்டாமல் இருக்கவே கிளறிவிட வேண்டும்.

பஆரஞ்சு கேசரி தூள் உங்கள் விருப்பத்துக்கு உட்பட்டது. அதைத் தவிர்த்தாலும் சுவையில் குறையில்லை!


(ரசிப்போம்... ருசிப்போம்!)

நன்றி குங்குமம் தோழி

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்