முத்தாடக்கண்ணியார்





முடத்தாமக் கண்ணியார் பொருநனுடைய கூற்றாகச் சொல்லும் இந்தப் பாட்டில் சோழ நாட்டின் வளத்தை விரிவாக அமைத்திருக்கிறார். 
சோழநாடு முழுவதும் வயல்கள் இருக்கின்றன. நிலத்தில் விளையும் நெல்லை, அந்த நிலத்தின் ஒரு பக்கத்தில் உள்ள திடலில் சேர் கட்டிச் சேமித்து வைத்திருக்கிறார்கள் வேளாளர்கள். ஒவ்வொரு மா நிலத்திலும் இந்த நெற்கூடுகள் நிரம்பியிருக்கின்றன. அங்கங்கே தென்னந் தோப்புகள் இருக்கின்றன. அங்கே குடிமக்கள் வாழ்கிறார்கள். உழவருடைய பெண்கள் மணலைக் குவித்து விளையாடுகிறார்கள். மயில்கள் பாகற்பழத்தையம் பலாப் பழத்தையும் கொத்தித் தின்கின்றன. ஆண் மயில்கள் அப்படியே மெல்ல அசைந்து அசைந்து வந்து மணற்பரப்பிலே ஆடுகின்றன. அருகில் உள்ள மலர்ச் செடிகளிலே வண்டுகள் முரல்கின்றன. அந்த ஒலி யாழோசை போல இருக்க, மயில்கள் நடனமாதரைப்போல ஆடுகின்றன.
வயல்கள் நிரம்பிய மருத நிலத்தில் கரும்பை வெட்டும் ஓசையும் நெல்லை அரியும் ஓசையும் எங்கும் முழங்குகின்றன. வயல் இல்லாத மேட்டு நிலங்களில் அடம்பங்கொடியும் பகன்றை என்ற கொடியும் படர்ந்திருக்கின்றன. புன்கமரமும் ஞாழல் மரமும் வளர்ந்திருக்கின்றன. 
ஒரு பக்கம் முல்லை நிலம் பரந்திருக்கிறது. காடம் காட்டைச்சார்ந்த இடமும் முல்லை நிலமாகும். அங்கே ஒருசார் மல்லைக்கொடி பூத்துப் படர்ந்திருக்கிறது. சிங்காந்தள், சிவந்த மலரைப் பூத்து நிற்கிறது. தேற்றா மரமும் கொன்றை மரமும் மொட்டவிழ்ந்து மலர்கின்றன. நீலமணியைப் போன்ற மலர்கள் காயா மரத்தில் மலர்கின்றன. 

கடற்கரைப் பக்கத்தில் நாரைகள் இறால்மீனைக் கொத்தித் தின்கின்றன. அங்கே வளர்ந்திருக்கும் புன்னை மரத்திலே அவை தங்குகின்றன. கரையிலே மோதி முழங்கும் அலை ஓசைக்குப் பயந்து அந்த நாரைகள் பனைமரத்திற்குப் போய் அதன் மடலில் இனிமையாகத் தங்குகின்றன. அங்கங்கே குலைகுலையாகத் தேங்காய்களும் வாழைக்காய்களும் அந்த அந்த மரங்களில் தொங்குகின்றன. 

ஒரு நிலத்தில் வாழும் மக்கள் வேறு நிலத்துக்குச் சென்று தம் நிலத்தில் விளையும் பண்டங்களை விற்று விட்டுகி இந்த நிலத்தில் விளைகின்ற பொருள்களை வாங்கி வருகிறார்கள். மலைப்பாங்கரில் வாழும் மக்கள் தேனையும் கிழங்கையும் கடற்கரைப் பக்கத்தில் விற்றுவிட்டு அங்கே கிடைக்கும் மீன் நெய்யையும் நறவையும் வாங்குகிறார்கள். மருதநநிலப் பரப்பில் வாழ்பவர்கள் கரும்பையும் அவலையும் விற்று மான் தசையையும் வேறு உணவுப்பண்டத்தையும் வாங்கிச் செல்கிறார்கள். 

குறமக்கள் குறிஞ்சி நிலத்திலே மலரும் குறிஞ்சிப் பூவை அணிந்து மகிழ்கிறார்கள். அது சலித்துவிட்டதானால் நெய்தல் பூவாலான கண்ணியைத் தலையிலே சட்டிக்கொள்கிறார்கள். காட்டிலே வாழும் கோழிகள் அருகிலே உள்ள மருத நிலத்துக்கு வந்து அங்குள்ள நெற் கதிரைத் தின்னுகின்றன. வயலுக்கருகில் வீட்டிலே வளரும் கோழிகள் மலைப்பக்கத்திற் சென்று அங்கே விளையும் தினையைத் தின்னுகின்றன. மலையிலே வாழும் மந்திகள் கடற்கரைக்கருகில் உள்ள உப்பங்கழியில் மூழ்கிக் களிக்கின்றன. கழியிலே திரியும் நாரைகள் மலையிலே போய் இளைப்பாறுகின்றன. இப்படிக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு வகை நிலப்பரப்பிலும், அங்கங்கே வாழ்வதற்குரிய பறவைகளும் விலங்குகளும் மக்களும் மற்ற நிலங்களுக்கும் சென்று சலிப்புத் தீர இன்பம் நுகர்வதைக் காணலாம். 

எல்லாவற்றிற்கும் மேற்பட்ட சிறப்பைக் காவிரியாற்றினாற் பெறுவது சோழநாடு. காவிரி எங்கே தோன்றினாலும் எவ்வெந்நாட்டின் வழியே வந்தாலும் அதன் முழுப் பயனையும் பெறுவது சோழ நாடுதான். சூரியன் வெம்மையாகத் தன் கதிர்களை வீசி எங்கும் பசு மரங்கங் வாடிப் போனாலும், மலைகளில் அருவி வறண்டாலும், மேகம் மழை பெய்ய மறந்தாலும், எங்கும் பஞ்சம் படர்ந்தாலும் என்றைக்கும் பொய்யாமல் நீர்வளம் பெருக்குவது காவிரியாறு. 

காவிரியில் வெள்ளம் வருவதைப் பார்த்தால் எத்தனை அழகாக இருக்கிறது! மலைப் பகுதிகளிலிருந்து வருவதனால் மலைவிளை பொருள்களை ஆற்று நீர் அடித்து வருகிறது. நறைக் கொடியும் நரந்தப் புல்லும் அகிலும் சந்தனமும் அதில் மிதந்து வருகின்றன. அவற்றைக் காவிரி கரையிலே ஒதுக்கிச் செல்கிறது. 

சோழ நாட்டிலுள்ள குளத்திலும் மடுவிலும் தன் நீரை நிரப்புகிறது. அங்கே மகளிர் நீரில் குடைந்து விளையாடுகிறார்கள். இந்தப் புது வெள்ளத்தால் எங்கும் நெற்பயிர் மிகச் சிறப்பாக விளைகிறது. நெற்கதிரை அரிவாளால் அறுத்துத் தொகுக்கிறார்கள். கதிர்களை மலைபோலக் குவிக்கிறார்கள். பின்பு கடா விட்டு நெல்லைக் குவியல் குவியலாகப் போடுகிறார்கள். பொன்னிறம் பெற்ற அவற்றைப் பார்த்தால் மேரு மலையின் நினைப்பு வருகிறது. பின்பு நெல்லைக் குதிர்களிலே கொண்டு போய்க் கொட்டுகிறார்கள். எல்லாக் குதிர்களும் நிரம்பி விடுகின்றன. ஒவ்வொரு வேலியிலும் ஆயிரம் கலம் நெல் விளைகிறது. 

எல்லாம் காவிரி தரும் செல்வம். காவிரிதான் சோழநாட்டையே காப்பாற்றுகிறது.இவ்வாறு சோழ நாட்டின் வளத்தை முடத் தாமக் கண்ணியார் வருணித்துப பொருநர் ஆற்றுப் படையைப் பாடி நிறைவேற்றினார் 248 அடிகளை உடைய பெரிய பாட்டு அது. அதைக் கேட்ட கரிகால் வளவன் பெண்புலவரைப் பாராட்டிப் பரிசில் வழங்கினான்.thanks......... international kallar peravai

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்