சிவந்தவன்

சிவன் என்ற தமிழ்ச் சொல்லிற்கு சிவந்தவன் என்று பொருளாகும். தமிழர்கள் குறிஞ்சி நிலத்திற்குறிய தெய்வமாக வழிபட்ட சேயோன் என்பதன் பொருளும் சிவந்தவன் என்பதால் சேயோனே சிவன் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள். முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமார் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்கநூல்களில் உள்ளன. சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருளாகும். முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றனர். உலகத்தின் கடவுள் (எந்நாட்டவருக்கும் இறைவன்) எனவும், பரப்பிரம்மம், ஆதி அந்தம் இல்லாதவன் என்றும் இறைவன் என்று வழங்கப்பெறுகிறார். தேவநாகிரி சொல்லான சிவ (शिव) என்பதற்கு களங்கமற்ற மற்றும் அழிப்பவர் என்று பொருளாகும். சிவபெருமானை அகங்காரத்தினை அழிப்பவர் என்று புராணங்கள் பிரம்மன் தலை கொய்தது முதல் தட்சன் அழிவு வரை மேற்கோள்களோடு கூறுகிறன. வேதங்களில் ருத்ரன் என்ற சிவ அம்சம் அழிக்கும் தொழில் செய்யும் மும்மூர்த்திகளுள் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறது.

எக்கணமும் யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் யோகி என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதல் சித்தன் என்றும், சிவபக்தர்களின் பக்தியில் மூழ்கி, அவர்கள் கேட்கும் வரங்களின் விளைவுகளை ஆராயாமல் வரம் தருவதால் பித்தன் எனவும் குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார். மேலும் சடாமுடியுடையதால் சடையாண்டி, சூலாயுதத்தினை வைத்திருப்பதால் திரிசூலன், மூன்றுகண்களை உடையதால் முக்கண்ணன் எனத் தோற்றத்தினை வைத்தும் பல பெயர்களின் அழைக்கப்படுகிறார். அத்துடன் கையிலாய மலையில் வசிப்பதால் கயிலைவாசன் எனவும், சுடுகாட்டில் வசிப்பதால் சுடலையாண்டி எனவும் வசிப்பிடம் கொண்டும் பல பெயர்களின் அறியப்பெறுகிறார்.

அடைக்கலம் காத்தான் எனத் தொடங்கி யாழ்மூரிநாதன் வரை ஆயிரம் தமிழ்ப்பெயர்களும் சிவபெருமானுக்கு கூறப்படுகின்றன. மேலும் சிவபெருமானுடைய நூற்றியெட்டு பெயர்கள் சிவன் அஷ்டோத்திர சத நாமாவளி எனும் தொகுப்பாகவும், சிவபெருமானுடைய ஆயிரம் பெயர்களைக் கொண்டது சிவ சஹஸ்ரநாமம் எனும் தொகுப்பாகவும் அமைந்துள்ளது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்