விஜயதசமி

விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம்.

விஜய தசமியை தசரா, தசைன், தசஹரா, தசேரா என பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

அம்பிகையின் வெற்றியை விஜய தசமி என்றும், ராமனின் வெற்றியை தசரா விழாவாகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.

விஜய தசமி தினத்தை வன்னி நவராத்திரி, வனதுர்க்கை நவராத்திரி என்றும் அழைக்கப்படுவது வழக்கம்.

மகாத்மியத்தில் மகா நோன்பு என்றும் குறிப்பிடப்படும் நாள் இது தான்.

புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

முந்தைய ஒன்பது நாட்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

அகில உலகையும் ஆட்டிப் படைத்த மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கையாக அவதரித்தாள்.

9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள்.

வட இந்தியப் பகுதிகளில் இராமன் இராவணனைக் கொன்ற நாளாக ராம்லீலா என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. பெருந்திரளான மக்கள் மைதானத்தில் கூடி இராவணன் மற்றும் அவனது சுற்றத்தினரது உருவபொம்மையை இராமர் வேடம் தரித்தவரால் அம்பெய்யப்பட்டு எரியூட்டப்படுகிறது.

தென்னிந்தியாவில் மகிசாசுரனை சக்தி வென்ற நாளாக கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் பெற்றனர் என்று கூறப்படுகிறது.

மைசூரில் மன்னராட்சி நடந்தபோது இந்த நாளில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது மன்னர் ஊர்வலம் வருவது தசரா ஊர்வலம் என அழைக்கப்பட்டது.

இதனையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அந்த வழக்கத்தை மன்னராட்சி முடிந்தபின்னரும், தற்போதும் கடைபிடித்து வருகின்றனர்.

விஜயதசமி அன்று எந்த ஒரு காரியத்தைத் துவக்கினாலும் அது வெற்றிகரமாக முடியும்

விஜயதசமி அன்று நாம் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். மேலும்
புதிய தொழில்களை தொடங்கலாம்.

பெற்றோர் தங்களது குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம்.

 ‘வித்யாரம்பம்’

இன்று  கோவில்களில் மற்றும்  பள்ளிகளில்
குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ’ என்று எழுத கற்றுக் கொடுப்பது  ‘வித்யாரம்பம்’
எனப்படுகிறது.

மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன், ஆரத்தி காட்டி அன்று சிலவரிகளாவது  படித்தால் கல்வி மேலும் அபிவிருத்தி அடையும்.

இன்று விஜய தசமியன்று
கூத்தனூரில் குடி கொண்டிருக்கும் சரஸ்வதி தேவியை ஏராளமானோர் சென்று வழிபட்டு குழந்தைகளுக்கு எழுத கற்றுக்கொடுப்பது வாடிக்கை. இதன் மூலம் குழந்தைகளின் கல்வி வளம் பெருகும் என்பது ஐதீகம்.

மகிஷனை வென்ற துர்க்கை

தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

மகிஷன் என்னும் அசுரன், பிரம்மதேவரை நோக்கி தவம் இருந்தான். இதையடுத்து அவன் முன் தோன்றினார்

பிரம்மன். அவரிடம், அழிவில்லாத வரத்தைக் கேட்டான் மகிஷன். அதற்கு பிரம்மன் மறுக்கவே, பெண்ணால்தான் அழிவு வரவேண்டும் என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான்.

பெண்கள் மென்மையானவர்கள். எனவே அவர்களால் நமக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என்ற எண்ணத்தில் மகிஷன் அந்த வரத்தைக் கேட்டுப் பெற்றிருந்தான்.

வரம் கிடைத்ததும் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். அவர்கள் விஷ்ணுவிடம் தங்கள் நிலையை எடுத்துரைத்தனர்.

விஷ்ணுவோ, ‘மகிஷனுக்கு பெண்ணால்தான் ஆபத்து என்ற நிலை இருக்கிறது. எனவே பராசக்தியிடம் போய் வேண்டுங்கள்’ என்று அனுப்பிவைத்தார்.

இதையடுத்து அனைவரும் பராசக்தியை நோக்கி தவம் இருந்தனர்.

அவர்களுக்கு அன்னை காட்சி கொடுத்தாள். அவளிடம் தேவர்கள் தங்கள் துன்பத்தைக் கூறியதுடன், அவர்களுக்கு உதவும் பொருட்டு, அசுரனுடன் போருக்கு தயாரானாள் அம்பிகை.

சிவபெருமான், அன்னைக்கு சூலத்தை வழங்க,
விஷ்ணு பகவான் சக்கரத்தை கொடுத்தார்.
அக்னி தனது சக்தியையும்,
வாயு வில்லாயுதத்தையும் வழங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதத்தை வழங்கினர்.

அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள்.

போர்க்களம் புகுந்ததும் தன் முன் நின்ற மகிஷனைப் பார்த்து அன்னைக்கு இரக்கம் ஏற்பட்டது.

அவனைக் கொல்வதை விடுத்து முதலில் பாசத்தை வீசி தன் வசப்படுத்த நினைத்தாள்.

ஆனால் அது முடியாமல் போனது. ஏனெனில் தீயவை எதுவும் நல்லதை விரும்பாது. என்ன செய்தாலும் அது தீவினையை மட்டுமே சார்ந்திருக்கும். அதற்கு அழிவு மட்டுமே முடிவு என்பதை உணர்ந்து கொண்ட அன்னை,

9 நாட்கள் போரிட்டு 10–ம் நாளில் மகிஷாசுரனை அழித்தாள்.

அப்போது தேவர்கள் அனைவரும் மேலுலகில் நின்று பொம்மை போல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதில் இருந்துதான் கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் ஒரு கூற்று நிலவுகிறது.

எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள்.

அந்த வெற்றியை தந்தருளும் நாளாக விஜயதசமி தினம் திகழ்கிறது.

இந்த நாளில் விரதமிருந்து வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

சக்தியின் நான்கு வடிவங்கள்:

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (பிள்ளைகள் செய்யும் தவறை தந்தைக்கு தெரியாமல் தாய் மறைப்பது போல, உலக உயிர்கள் செய்யும் தவறை சிவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்தல்) அருளல் போன்ற தொழில்களை செயல்படுத்த ஆதாரமாகத் திகழ்பவள் சக்தி.

எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பதால் அவளை “ஆதிபராசக்தி என்பர்.

அவள் சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும்போது “பவானி என்றும், அவளே ஆண் தன்மையை ஏற்கும் போது “மகாவிஷ்ணு என்றும், அசுரர்களை அழித்து உலகத்தைக் காத்தருளும்போது “காளி என்றும், வெற்றிவாகை சூடி புன்முறுவல் காட்டும் போது “துர்கா என்றும் பெயர் பெறுகிறாள்.

 பவானி,  மகாவிஷ்ணு, காளி, துர்கா ஆகிய  வடிவங்களும் சக்தியின் வடிவங்களாகும்.

தடைகள் நீங்க துர்க்கா மந்திரம்

“ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே”

“ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே

ஸர்வாபாதா விநிர்முக்தோ தனதான்ய ஸுதான்விதஹ
மனுஷ்யோ மத்ப்ரஸாதேன பவிஷ்யதி நஸம்சயஹ”

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்