"வேலு நாச்சியார்"

-"வேலு நாச்சியார்"----வடநாட்டில் ஜான்சி ராணி தோன்றுவதற்கு ஒரு நூற்றாண்டு காலம் முன்பே தமிழகத்தில் தோன்றி வெள்ளையருக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர்.

ஆட்சிக்காலம் கி.பி 1780- கி.பி 1783 முடிசூட்டு விழா கி.பி 1780 பிறப்பு 1730 பிறப்பிடம் இராமநாதபுரம் இறப்பு 25 டிசம்பர், 1796 முன்னிருந்தவர் முத்து வடுகநாதர் அரச வம்சம் சேது மன்னர் உலகையே அடக்கி ஆண்ட பிரிட்டிஷ் காரர்களை அடக்கி மண்டியிட வைத்தவர். வெள்ளையர்கள் மன்னிப்பு கேட்டு பட்டயம் அனுப்பியது மகாராணி வேலுநாச்சியாரிடம் மட்டும் தான் .வெள்ளையரை போரில் வென்ற முதல் மகாராணியும் இவர்தான். .

"வேலு நாச்சியார்"

இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள சக்கந்தி என்னும் ஊரில் மன்னர் விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி மற்றும் முத்தாத்தாள் நாச்சியாருக்கு பிறந்தவர்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு ஏற்றாற் போல், வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார்.

வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் பத்து மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவர்.

இப்படி வீறுகொண்டு வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியாரின் அழகிலும், வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாததேவர் வேலு நாச்சியாரை மணமுடித்தார்.
சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் போர்க்கலைகள் தெரிந்தவர், வீரம் மற்றும் விவேகத்தில் செறிந்தவர்.

இதனைத் தொடர்ந்து 1746ம் ஆண்டு சிவகங்கைக்கு குடிபுகுந்தார். அங்கு தன் கணவனுக்கு துணையாக அன்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது, நவாப்பின் அடுத்த குறி சிவகங்கைதான்.

சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன.

அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன, அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான்.

ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாப்பின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர்.

முத்தவுடுகநாததேவரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர், இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை.

முத்துவடுகநாததேவர் கொல்லபட்டார், காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.

கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார் வேலு நாச்சியார். இதற்குள் நவாப் கூட்டமும், ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.
வேலு நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது.
எங்கெங்கும் பிணக் குவியல், கோயில் திடலின் நடுவே அரசரும், இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள், காணக் கூடாத காட்சி அது.

கதறி அழுதார் நாச்சியார், கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார்.

ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா? அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம்.

பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார்.

விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள். வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி.

நவாப்பையும், ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும், நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார்.

அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில் இருந்தார், கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் கொண்டு சென்றார்கள்.

அவர்களை பார்த்து வேலு நாச்சியார் வரவில்லையா? என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான் ஒரு வீரன்.

அது வேலு நாச்சியார், ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார்.

அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி, தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.

அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் தொடங்கினார்.

போர் புரிவதற்கான நாள் நெருங்கி வரவே, ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுக்கு எதிராக போர் செய்யக் கிளம்பி முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார்.

சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும் என்பதால்

வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவையும் நியமித்தார் வேலு நாச்சியார்.

சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.

விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம்.

வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் போது வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்கு உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது.

இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை, வேலு நாச்சியார் ஆங்கிலேய படையுடன் நேருக்குநேர் போர் தொடுத்தார். வேலு நாச்சியார் வாளுக்கு வெட்டுண்டு வீழ்ந்தார்கள், பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது, வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.

அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார்.

பின்னர் சில காலங்கள் சீரும், சிறப்புமாக நாட்டை ஆண்ட இந்த வீரமங்கை உடல் நலக்குறைவால் மருது சகோதரர்களிடம் ஆட்சி பொறுப்பை கொடுத்து விட்டு 1796ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி காலமானார்.

இந்திய சுதந்திரத்திற்காக போரிட்ட வேலு நாச்சியாரை நினைவு கூர்ந்து இந்திய அஞ்சல் துறை 2008 டிசம்பர் 31ம் நாள் வேலு நாச்சியாரின் உருவப் படத்துடன் அஞ்சல்தலை வெளியிட்டது.

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டதில் தமிழக வீரர்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இந்த வீரமங்கையே உதாரணம்.

வீரப்பேரரசி வேலுநாச்சியாருக்கு,
வீரவணக்கம் செலுத்துவதில் பெருமை கொள்வோம்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்