துளசி ஐயா வாண்டையார்


 கல்வித் தந்தை பூண்டி அய்யா மறைந்தார்.......🙏🙏🌸🌺🙏🙏                     உச்சி  வெயிலுல செல்லாத்தா... நம்ம உச்சந்தல கருகல.

கொட்டுற மழையில செல்லாத்தா... நம்ம குடுசைங்க ஒழுகல.

ஆண்டவனை வேண்டல செல்லாத்தா... மாண்டவனை வேண்டல.

வாண்டையாரு வடிவத்தில செல்லாத்தா... வணங்குவோம்டி கடவுள!'


நாற்று நடவு செய்யும் பெண்கள், அலுப்புத் தெரியாமல் இருக்க பெருங் குரலெடுத்துப் பாடுகிறார்கள் இன்றும் பூண்டியிலே.


சோழப் பேரரசு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. வளநாடுகள், நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. “அருள்மொழித்தேவன் வளநாடு - ராஜராஜன் வளநாடு - ராசாச்சரயன் வளநாடு - கேரளாந்தகன் வளநாடு” என்று பிரிக்கப்பட்டபொழுது, ‘நித்தவினோத வளநாடு’ என்று ஒரு பகுதி அறிவிக்கப்பட்டது. அந்த நித்தவினோத வளநாடுதான் பூண்டி மண்டலம். அந்த நித்தவினோத வளநாடுதான் சரித்திரப் பிரசித்திப்பெற்ற வெண்ணிப் பரந்தலைப் போர் நடைபெற்ற இடம். கரிகாற்பெருவளத்தான் வாளின் வீரம் நிர்ணயிக்கப்பட்ட இடம் வெண்ணிப்பரந்தலை. அதற்குப் பெயர் வெண்ணிக்கூற்றம்.


இந்தத் தஞ்சையில் எழுப்பப்பட்டு இருக்கிற பிரகதீஸ்வரர் ஆலயம், பொன்னியின் செல்வன் கட்டிய ஆலயம், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற, இந்தத் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில், 10ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இன்றைக்கும் இருக்கிறது. அந்தக் கோவில் கல்வெட்டில், ‘நித்தவினோத வளநாட்டு வெண்ணிக் கூற்றறத்துக் கீழ்ப் பூண்டியாகிய ஓலோக மாதேவிச் சதுர்வேதி மங்கலம்’ என்று கல்வெட்டு இருக்கிறது. 


ஆயிரக்கணக்கான கழனிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பூமி, மன்னர் மரபு வழியில் வந்த பூண்டி வாண்டையார் குடும்பம், இன்றைக்கு அந்தப் பெயரிலேயே கல்லூரி அமைத்து, வசதியற்ற ஏழைப்பிள்ளைகளுக்கும் கல்வியைத் தருகிறார்கள். அந்தப் பூண்டி மண்டலத்தைத்தான் ‘நித்தவிநோத வளநாட்டு வெண்ணி கூற்றத்துக் கீழ்ப்பூண்டியாகிய ஓலோக மாதேவிச் சதுர்வேரித மங்கலம்’ என்று ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கல்வெட்டுக் கூறுகிறது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்