விஜயாலய சோழீஸ்வரம்



விஜயாலய சோழீஸ்வரம்------நார்த்தாமலையில் மொத்தம் ஒன்பது குன்றுகள் உள்ளன. மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை, மற்றும் பொன்மலை என்பன அவற்றின் பெயர்கள்

மேல மலை மீது விஜயாலய சோழீஸ்வரம் என்ற கோவில் உள்ளது. இக்கோவிலின் வெளிப்புறச் சுவரில் காணப்படும் கல்வெட்டுமூலம் இக்கோவில் சாத்தன் பூதி என்பவரால் கட்டப்பட்டதாகவும், மழையினால் இது இடிந்துவிடவே, மல்லன் விடுமன் என்பவர் இதை விஜயாலய சோழன் காலத்தில் புதுப்பித்தார் என்றும் அறியப் படுகிறது. விஜயாலயன் காலம் முதல் இக்கோவில் விஜயாலய சோழீஸ்வரம் என்று வழங்கப்பட்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விஜயாலய சோழீஸ்வரம் கோயிலை முத்தரையர் தலைவர் இளங்கோ அடி அரையன் கட்டியுள்ளார். சோழர் காலத்தில் கட்டப்பட்ட முற்பட்ட சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. பிரதான கோயிலின் வாயிலில் கலையழகு மிளிரும் இரு துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தில் நடன மங்கைகள் உள்பட பல அற்புதச் சிலைகள் உள்ளன. . இது தமிழகக் கோவில் அமைப்பிலே தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரதானக் கோயிலின் கருவறை வட்ட வடிவில் உள்ளது தனிச்சிறப்பு. உள்ளே பெரிய சிவலிங்கம் உள்ளது. பிரதான கோயிலின் அர்த்த மண்டபத்தில் சாந்து பூசப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.உட்பிரகாரச் சுவர்களில் பண்டைய ஓவியங்கள் அழிந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.

கருவறை மீது அழகிய விமானம் எழுப்பப்பட்டுள்ளது. இது அதிட்டானம் முதல் உச்சிவரை கல்லாலானது. இது கட்டுமான கற்கோவிலாகும். இது காஞ்சி கைலாசநாதர் கோவில் விமானத்தின் தோற்றத்தைக் கொண்டுள்ளது.

கோவில் விமானத்தைச் சுற்றி எட்டு துணை ஆலயங்கள் இருந்தன எனப்படுகிறது. இவற்றில் ஆறு ஆலயங்கள் இப்பொழுது நல்ல நிலையில் உள்ளன. ஆனால், இவற்றில் தெய்வங்கள் வழிபாட்டிற்கு இல்லை.

குன்றிலிருந்து கீழே செல்லும் பாதையில் ஐயனார் கிராம தெய்வ கோயில் அமைந்துள்ளது. மேலமலையில் குளிர்ச்சி தரும் பாறைகளின் நடுவே மரங்களின் சூழலை அனுபவிப்பதற்காகப் பலர் இந்த இடத்துக்கு வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்