சூரப்ப சோழ கோனார்களும் விளங்கா புதிர்களும் :-















































சூரப்ப சோழ கோனார்களும் விளங்கா புதிர்களும் :-
******************************************************
இன்று சிதம்பரம் நடராசர் கோயிலின் நிர்வாகம் தங்களிடம் உள்ளது, சிதம்பரம் கோயிலில் முடி சூட்டுவதால் நாங்களே சோழ வம்சத்தினர் என அங்கு வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் முறையிட்டு வருகின்றனர். தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் இவர்களின் கூற்றை தொல்லியல் துறை பொருட்படுத்தவில்லை.
தங்களை சோழர் வம்சம் என கூறிக்கொள்ளும் சூரப்பர்கள் இதுவரை பதில் அளிக்காத பல புதிர்களில் சிலவற்றை காண்போம்.

அக்னி குலம் :-
**************
சோழர்கள் தங்களை காசிபர் வழியில் சூரிய குலத்தில் உதித்தவர்கள் என செப்பேடுகளில் குறித்துள்ளனர். ஆனால் பிச்சாவரத்தார்களோ தங்களை அக்னி குலம் என கூறிக்கொள்கின்றனர். சம்பு மகரிஷி செய்த யாகத்தில் சிவ பெருமானின் நெற்றியில் இருந்து வந்த நெருப்புத்துளி அந்த யாகத்தில் விழுந்து வீர வன்னிய ராஜா வந்ததாகவும் அவர் வழியில் தாங்கள் வந்ததாக கூறுகின்றனர்.

ஆனால் சோழர்களோ தங்களின் ஆதியாக முல்லை நில மாயோனான திருமாலை குறிப்பிடுகின்றனர்.
(திருமால்-->பிரமன்-->காசிபர்-->சூரியன்-->சோழர்) என சோழர் செப்பேடுகளில் குறிக்கப்பட்டுள்ளது.

ஆக சம்பு மகரிஷி யாகத்தில் வந்த வீர வன்னிய ராஜா வழியினருக்கும் , திருமாலின் அம்சமாக காசிபரின் வழி வந்த சூரிய குல சோழர்களுக்கும் யாதொரு தொடர்பு இல்லை என்பதே உண்மை.
காசிப கோத்திரத்தில் உதித்த சூரிய குல சோழரை எவ்வாறு வீர வன்னிய மகாராசா வழிவந்ததாக கூறிக்கொள்ளும் அக்னி குலத்தார் உரிமை கோருகின்றனர்?

இரண்யவர்மன் வழியினர் :-
*****************************
பிச்சாவரம் சூரப்ப சோழனார்கள் தங்களை இரண்யவர்மன் வழிவந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளதாக தொல்லியல் அறிஞர் நடன காசி நாதன் எழுதியுள்ளனர்.
" 19 ஆம் நூற்றாண்டு வரை இரண்யவர்மன் வழிவந்த சோழ கோனார்களிடமே தில்லை நடராசர் கோயிலின் சாவி ஓவ்வொரு இரவும் ஓப்படைக்கப்படும் " என தனது புத்தகமான( சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு ( பக் 23-24) ல் குறிப்பிட்டுள்ளார்.

இதே தகவல் அக்னி குலாதித்தன் பத்திரிக்கையில் 1908ல் வெளிவந்துள்ளது. அதாவது :- " செங்கோல் ஏந்தி பேர்பரவக் காக்குமிர ணியவன்மப்போர் பெறு சோழன் சந்ததியி லினிது போந்த சீர்பரவப் பித்தர்புரத் துரை சூரப்பன் சிற்சபையைந்" என பிச்சாவரம் சூரப்பர் வழியினர் இரணிவர்மன் வழிவந்தவர் என குறிப்பிட்டுள்ளனர்.(சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு)

தென்னிந்திய சாதிகள் பற்றிய ஆய்வு நூலை வெளியிட்ட எட்கர் தர்ஸ்டனும் தன்னுடைய குறிப்பில் " பிச்சாவரத்தில் உள்ள ஒரு பள்ளி குடும்பம் ஆறாம் நூற்றாண்டில் வாழந்த பல்லவ மன்னன் ஹிரண்ய வர்மனின் வழிவந்தோர் என தங்களை அழைத்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு : நடன காசி நாதன்( பக் 71)
மேற்கூறிய தகவல்கள் மூலம் பிச்சாவர குடும்பத்தினர் தங்களை இரண்ய வர்மன் வழியினர் என தங்களை அழைத்துக்கொண்டது விளங்கும்.

சரி, தற்போது யார் இந்த இரண்யவர்மன் என காண்போம்.

இரண்யவர்மன் பற்றி ஆய்வு செய்த திரு, நடனகாசிநாதன் அவர்களின் ஆய்வு முடிவு: " கிபி 13 ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் இயற்றப்பட்ட ' கோயில் புராணம்' எனும் நூலில் சிம்மவர்மனாகிய இரணியவர்மன் வியாக்ரபாத முனிவரால் கோயிலின்(தில்லை) உள்ளே அழைத்து வரப்பெற்று , நடமாடும் பெருமானை வணங்கிய பின்னர், இரண்யவர்மனின் தலையில் இறைவனின் திருப்பாதுகைகளைத் தர்பித்தார் என கூறியுள்ளார். இரண்யவர்மன் என அழைக்கப்பட்ட சிம்மவர்மன் இரண்டாம் சிம்மவர்ம பல்லவன் ஆகும். இந்த சிம்மவர்மனே சிம்மவிஷ்ணுவின் தந்தை ஆவார். இவரது காலம் கிபி 550 ஆகும். சோழர்களை வென்ற இந்த இரண்யவர்மன் தில்லைக்கு வந்து சோழரைபோல அத்திப்பூ சூடி முடி சூட்டிக்கொண்டதை கோயிற்புராணம் எனும் நூல் புராணக்கதையாக கூறுகிறது"
சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு : நடனகாசிநாதன் ( பக் 101)

கிபி 1921 ல் சிதம்பரத்தில் நடைப்பெற்ற ஒரு விழாவில் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார் விழாவுக்கு தலைமை வகித்ததாகவும், அப்பொழுது சூரப்பா சோழனார் பற்றி வாசிக்கப்பட்ட வந்தனோபசாரப் பத்திரம் எனும் வாழ்த்துரையில்
" மிகு தில்லை நகராண்ட வெங்கள் இரண்யவன் மன்மதலாயிதனைக் கேண்மோ காடவர் நின் முன்னோர்கள்" என இரண்யவர்மன் மற்றும் காடவர்கள் ஆகியோரை சூரப்ப சோழனார்களின் முன்னோர் என கூறியுள்ளனர்.

கிபி 19 ஆம் நூற்றாண்டு வரை தங்களை சாதவாகன மரபில் பரத்துவாஜ கோத்திரத்தாரான பல்லவ இரண்யவர்மர் வழியினர் என அழைத்துக்கொண்ட பிச்சாவரம் சூரப்ப சோழ கோனார்கள் தங்களை திடீரென் சோழர் வம்சம் என உரிமை கோரி பரப்புரைகள் செய்வது எந்த வகையில் பொருந்தும்?

600 ஆண்டுகள் மாயம்?
************************

சிதம்பரம் கோயிலுடன் தொடர்புடைய பல செப்பேடுகள் மற்றும் ஆவணங்கள் இதுவரை கிடைத்துள்ளது. இத்தகைய வரலாற்று ஆவணங்கள் ஒன்றில் கூட தங்களை சோழ வம்சம் என்றும், சிதம்பரத்தில் மன்னராக தொடர்ந்து பல நூற்றாண்டுகள் முடிசூட்டி ஆட்சி செய்து வருவதாக கூறிவரும் பிச்சாவரம் சூரப்பர்கள் பற்றி சிறு குறிப்பு கூட இல்லை. சிறு நிலப்பரப்பை ஆட்சி செய்த பாளையக்காரர்கள் கூட அப்பகுதியில் வெளியிடப்பட்ட செப்பேடுகளில் ஆட்சியாளராக போற்றப்பட்டு அவர்களைப்பற்றிய புகழ்மொழிகளை காணமுடிகிறது. புதுக்கோட்டையில் சிறுநிலப்பகுதிகளை ஆட்சி செய்த அறந்தாங்கி தொண்டைமான், பல்லவராயர், பெரம்பூர் கத்தலூர் அரசர்கள் மற்றும் சூரைக்குடி அரசர்கள் தங்களை அப்பகுதியின் ' அரசு' என பல கல்வெட்டுகளில் குறித்துள்ளனர்.ஆனால் சோழ மன்னர் என தங்களை பிற்காலத்தில் அழைத்துக்கொண்ட பிச்சவரத்தார் பற்றிய சிறுகுறிப்பும் கூட தில்லை கோயில் ஆவணங்களில் இல்லை.

வடமொழி செப்பேடு 1 : ( கிபி 1383)( திருப்பனந்தாள் காசிமட செப்பேடுகள்)
மன்னர்: இரண்டாம் ஹரிஹரன்
செய்தி : விஜய நகர மன்னர் புக்கரின் மகனான இரண்டாம் ஹரிஹரன் காலத்தில் தில்லை நடராசர் கோயிலுக்கு புன்னத்தூர் என்ற ஊரை தானமாக அளித்துள்ளார். விஜய நகர மன்னரின் புகழ் மொழிகள் இடம்பெற்றுள்ளது. பிச்சாவரத்தார் பற்றி எந்த குறிப்பும் இல்லை.

வடமொழி செப்பேடு 2: ( கிபி 1387)( திருப்பனந்தாள் காசிமட செப்பேடுகள்)
மன்னர்: இரண்டாம் ஹரிஹரன்
செய்தி : விஜய நகர மன்னர் இரண்டாம் ஹரிஹரன் காலத்தில் தில்லையில் 76 ஆண்டுகள் கழித்து பூஜை நடந்துள்ளது. மாலிக்காபூர் படையெடுப்பினையடுத்து 76 ஆண்டுகள் தில்லை நடராசர் பூஜைகள் இல்லாமல் இருந்துள்ளார். பூஜைகள் தொடர்ந்து நடைபெற ஹரிஹரன் 2000 பொன் கொடையாக அளித்துள்ளார். 76 ஆண்டுகள் தில்லையில் ஓரூ வேளை பூஜை கூட நடைபெறாதபோது தங்களை சோழர்கள் என கூறிக்கொள்ளும் பிச்சாவரம் சூரப்பர்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர்?

" கிபி 1427 ஐ சேர்ந்த விசய நகர மன்னர் வீர பிரதப்ப ராயர் தில்லை கோயில் சட்டதிட்டங்கள் மற்றும் கோயில் நிலங்கள் தொடர்பாக எழுந்த குழப்பங்களை தீர்க்க அவர் இயற்றிய ஆணைகளை பற்றி கூறுகிறது ( கல்வெட்டு 376/ 1913). (தில்லை சிற்றம்பலவாணர் கோயில் / முத்துச்சாமிப்பிள்ளை IAS 1987/ பக் 82).இந்த காலகட்டத்திலும் இப்பகுதியில் எந்த ஆட்சியாளரும் இல்லை என்பதை இநத கல்வெட்டு விளக்குகிறது.

" கிபி 1578 ல் வேங்கட தேவ மகாராயர் கால கல்வெட்டில் தில்லைக் கோயிலில் 20 வழிபாட்டு உணவளிப்புகள் பரதேசிகளுக்கு பகிர்ந்தளிக்க பட வேண்டும் என கட்டளையை ஏற்படுத்தி அந்த கட்டளைக்கு பொறுப்பாளராக, கண்காணிப்பாளராக நமச்சிவாய உடையார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்" (தில்லை சிற்றம்பலவாணர் கோயில் / முத்துச்சாமிப்பிள்ளை IAS 1987/ பக் 84) ( கல்வெட்டு 363/1913) இந்த காலகட்டத்தில் கோயில் பொறுப்பாளர்களாக உடையார் என்பவர் இருந்துள்ளார். பிறகு பிச்சாவரத்தார் பொறுப்பாளர்கள் இல்லையா? இதற்கு அவர்களே பதில் கூற வேண்டும்.

திருவாரூர் செப்பேடு 6: (கிபி 1684)( தஞ்சை மராத்தியர் செப்பேடுகள்)
அரசர் : சாம்போசி
செய்தி: மராத்திய மன்னர் சாம்போசி என்பவரின் குலகுருவான முத்தையா தீட்சிதர் என்பவரின் தலைமையில் தில்லை நடராசருக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. திருச்சிற்றம்பல தவமுனிவர் குடமுழுக்கு செய்துள்ளார். தில்லை நடராசரின் புகழ்மொழிகள் தரப்பட்டுள்ளது. பிச்சாவரத்தார் பற்றிய எந்த குறிப்பும் காணப்படவில்லை. தில்லைக்கோயிலே தங்களது வசம் இருந்ததாக கூறும் பிச்சாவரம் குடும்பத்தார் கோயில் குடமுழுக்கு தொடர்பான செய்திகளில் கூட குறிப்பிடப்படவில்லை.

திருவாரூர் செப்பேடு 4 : ( கிபி 1686)( தஞ்சை மராத்தியர் செப்பேடுகள்)
அரசர்: சாம்போசி( செஞ்சி அரசர்- மராத்தியர்)
செய்தி: 17 ஆம் நூற்றாண்டில் தில்லையில் சில வருடங்கள் பூஜை நடத்தப்படாமல் இருந்ததாகவும், குடந்தையில் சைவ வேளாளர் குலத்தில் தோன்றிய சிவப்பிரகாசர் அக்காலத்தில் ஏற்பட்ட பூஜை தட்டுப்பாட்டை நீக்கியதாகவும், பூஜைகள் நடைபெற லிங்கம நாயக்கர் என்பவர் உதவியதாக " அரசவனத்து அறநிலையம்" என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. கிபி 1648 முதல் கிபி 1686 முடிய சிதம்பரம் நடராசர் சிலை சிதம்பரத்தில் இருந்து வேறு இடங்களில் பாதுகாக்கப்பட்டுள்ள தகவலை செப்பேடு தருகிறது. 37 ஆண்டுகள் மதுரையிலும், 40 மாதங்கள் குடுமியான்மலையிலும் பாதுகாக்கப்பட்டு பிறகு சிதம்பர சிற்றம்பல முனி என்பவர் மூலம் தில்லையை அடைந்துள்ளார் நடராசர். அக்கால கட்டத்தில் பீஜப்பூர் சுல்தான்கள் படையெடுப்பில் இருந்து காக்க சிதம்பரம் நடராசர் வேறு இடங்களில் பாதுகாக்கப்பட்டு இருக்கலாம். கிபி 1686 ல் மீண்டும் தில்லையை அடைந்த நடராசருக்கு மராத்திய மன்னர் சாம்போசி என்பவரின் ஆணையின் பேரில் கோபால தாதாசி என்பவரால் திருப்பணிகள் செய்யப்பட்டு மீண்டும் குடமுழுக்கு நடத்தப்பட்டு உள்ளது. இந்த செப்பேட்டிலும் பிச்சாவரம் சூரப்பர்கள் பற்றி சிறு தகவலும் இல்லை. தங்களை சோழ மன்னர்கள் என்று அழைத்துக்கொள்ளும் பிச்சாவரம் குடும்பத்தினர் தில்லை நடராசருக்கு ஆபத்து வந்த போதுகூட அவரை காக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தகவல் இல்லை. பல ஆண்டுகள் பூஜை நடைபெறாமல் இருந்தபோதும் கூட வேறு ஊர்களில் இருந்தூ வந்த குறுநில மன்னர்கள் உதவியால் தான் திருப்பணிகளும் பூஜைகளும் நடைபெற்றுள்ளது. பிச்சவரத்தார்கள் என்ன செய்து கொண்டு இருந்தனர் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

திருவாரூர் செப்பேடு 4 : ( கிபி 1686)( தஞ்சை மராத்தியர் செப்பேடுகள்)
அரசர்: சாம்போசி( செஞ்சி அரசர்- மராத்தியர்)
செய்தி: கிபி 1648ல் தில்லையை விட்டு சென்ற நடராசர், 40 திங்கள் குடுமியான்மலையிலும், எஞ்சிய நாட்கள் மதுuரையிலும் இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. சாம்போசி மன்னர் கிபி 1684 ல் கோபால பிருத்விசுரபதி என்பவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப தில்லைத் திருப்பணியை தொடங்கினார் என்றும், பொன் வேய்ந்தார் என்றும், கிபி 1686 ல் தில்லைக்கு நடராசர் திரும்பியதால் பாருயிரெல்லாம் உய்யும், செம்பொன் மாமழை பேயும், தில்லை மாநகர் வாழும் என போற்றப்பட்டுள்ளது. இந்த செப்பேட்டிலும் பிச்சாவரம் குடும்பத்தினருக்கும் தில்லை நடராசருக்கும் உள்ள தொடர்பை குறிக்கும் வகையில் எந்த தகவலும் இல்லை.

திருவாரூர் செப்பேடு 4 : ( கிபி 1686)( தஞ்சை மராத்தியர் செப்பேடுகள்)
அரசர்: சாம்போசி( செஞ்சி அரசர்- மராத்தியர்)
செய்தி : தில்லையில் இருந்து நடராசர் வெளியேறிய செய்தி இந்த செப்பேட்டிலும் கூறப்பட்டுள்ளது. கிபி 1684 மற்றும் கிபி 1686 ஆகிய ஆண்டுகளில் தில்லையில் குடமுழுக்கு நடைப்பெற்றுள்ளது.
சாம்போசி, கோபால தாதாசி, சிற்றம்பல முனிவர் ஆகியோரின் முயற்சியில் குடமுழுக்கு நடந்ததாக அவர்கள் போற்றப்பட்டுள்ளனர். கோயிலின் குடமுழுக்கை நடத்துவதில் அந்த பகுதியின் மன்னர் என கூறிக்கொள்ளும் பிச்சாவரத்தார் பங்கு சிறிதும் இல்லை என இந்த செப்பேடு விளக்குகிறது.

திருவாரூர் செப்பேடு 1 :(கிபி 1719)( திருப்பனந்தாள் காசிமட செப்பேடுகள்)
அரசர்:முதலாம் ஏகோசி
செய்தி: நியமம் என்ற ஊரின் தலைவரான ராயஸ்ரீ முத்து செல்லப்பா முதலியார் என்பவருக்காக வல்லத்துத் தோட்டமும், ஆயத்தில் ஒரு ஆள் தீர்வையும், தில்லைச் சிதம்பரேசுவரர்க்கும், கோவிந்தராச பெருமாளுக்கும் கொடையாக அளித்துள்ளனர். இந்த கொடைகளை தில்லைக்கோயிலின் சார்பாக பெற்றுக்கொண்டவர் கோயில் கட்டளைகளை நடத்தும் சரவணைத் தம்பிரான் என்பவர். இந்த காலகட்டத்தில் தில்லைக் கோயிலின் பொறுப்புகளை வகித்துள்ளவர் சரவணைத் தம்பிரான் ஆவார். இந்த செப்பேட்டில் எங்கும் பிச்சாவரம் சூரப்பர்களை பற்றி எந்த குறிப்பும் இல்லை. இந்த காலகட்டத்தில் கோயில் பொறுப்புகள் அவர்களிடம் இல்லை என்பதை இச்செப்பேடு விளக்குகிறது.

பரங்கிப்பேட்டை செப்பேடு 01:(கிபி 1747)( திருப்பனந்தாள் காசிமட செப்பேடுகள்)
செய்தி : கிபி 1747 ல் தில்லையில் ஆயிரங்கால் மண்டபம், நாலுக்கோபுரம் முதலியவற்றுக்கு திருப்பணிகள் செய்த சண்முகத் தம்பிரான் என்பவருக்கு பரங்கிப்பேட்டை வணிகர்கள் திருப்பணிக்கு உதவியாக தங்களால் இயன்ற பொருட்களை வழங்கி உதவியுள்ளனர். தில்லைக் கோயிலின் பொறுப்பு தொடர்ந்து தம்பிரார்கள் வசமே இருந்துள்ளது. இந்த செப்பேட்டிலும் பிச்சாவரம் சூரப்பர்கள் பற்றி சிறு குறிப்பு கூட இல்லை.

பரங்கிப்பேட்டை செப்பேடு 02:(கிபி 1747)( திருப்பனந்தாள் காசிமட செப்பேடுகள்)
செய்தி : கிபி 1747 ல் தில்லையில் ஆயிரங்கால் மண்டபம், நாலுக்கோபுரம் முதலியவற்றுக்கு திருப்பணிகள் செய்த சண்முகத் தம்பிரான் என்பவருக்கு பரங்கிப்பேட்டையில் வணிகம் செய்து வந்த ஆலந்து நாட்டினர் திருப்பணிக்கு உதவியாக தங்களால் இயன்ற பொருட்களை வழங்கி உதவியுள்ளனர். தில்லைக் கோயிலின் பொறுப்பு தொடர்ந்து தம்பிரார்கள் வசமே இருந்துள்ளது.

" கிபி 1773ல் மைசூர் போரின் போது தில்லை நடராசரை பாதுகாப்புக்காக திருவாரூர் கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் தஞ்சை அரசரின் உதவியால் நடராசர் தில்லையை அடைந்துள்ளார்.சூரப்பர்கள் எங்கே சென்றனரோ?.( தில்லை சிற்றம்பலவன் கோயில்: பக் 23: சோம சுந்தரம் பிள்ளை)

" மற்றொரு முறை ஒரு போரின்போது தில்லை நடராசரை தீட்சிதர்கள் புளியங்குடி எனும் ஊரில் உள்ள ஒரு புளிய மர பொந்தில் பல ஆண்டுகள் மறைத்து வைத்திருந்தனர்.பிற்காலத்தில் நிலைமை சரியானவுடன் நடராசரை மீண்டும் தில்லைக்கு கொண்டு வந்துள்ளனர்.( தில்லை சிற்றம்பலவன் கோயில்: பக் 23: சோம சுந்தரம் பிள்ளை)

" கிபி 1781 ல் ஆங்கிலேயருக்கும் ப்ரெஞ்சு படையினருக்கும் போர் நடைபெற்றதால், தில்லை நடராசர் பாதுகாப்புக்காக திருவாரூர் கொண்டு செல்லப்பட்டார்" (தில்லை சிற்றம்பலவாணர் கோயில் / முத்துச்சாமிப்பிள்ளை IAS 1987/ பக் 85) இந்த சம்பவத்தின் போது சோழ மன்னர் பரம்பரை என அழைத்துக்கொள்ளும் பிச்சாவரத்தார்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்??

" கிபி 1797 ல் தில்லையில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட விவாதத்தை ஆர்காடு நவாபின் அதிகாரி ஒருவர் தீர்த்து வைத்ததாக ஆர்காடு நவாப் பர்வானா தெரிவிக்கிறது".(தில்லை சிற்றம்பலவாணர் கோயில் / முத்துச்சாமிப்பிள்ளை IAS 1987/ பக் 43)
இவ்விரு தரப்பினர்க்கும் ஏற்பட்ட தகராறை தீர்க்க ஆர்காடு நவாபின் அதிகாரியே வந்துள்ளார். தில்லையில் அக்காலத்தில் எந்த குறுநில தலைவரும் ஆட்சி செய்யவில்லை என்பதை இது தெரிவிக்கிறது.

" கிபி 18 ஆம் நூற்றாண்டில் போர்களின் போது சிதைவுற்ற தில்லை கோயிலின் பல பகுதிகளை பச்சையப்ப முதலியாரும், அவரது மனைவி சுப்பம்மாள் என்பவரும் 40,000 வராகன் செலவு செய்து திருப்பணி செய்தனர். இவர்களின் திருப்பணிகளை மழவை மகாலிங்கயரும், காஞ்சி வித்துவான் சபாபதி அவர்களும் பல பாக்களால் போற்றியுள்ளனர். பச்சையப்ப முதலியார் மற்றும் அவரது துணைவியாரின் உருவங்களை இன்றும் கிழக்கு கோபுர வாயிலில் காணலாம்."( தில்லை சிற்றம்பலவன் கோயில்: பக் 23: சோம சுந்தரம் பிள்ளை)

" கிபி 19 ஆம் நூற்றாண்டில் அண்ணாமலை செட்டியார் மற்றும் அவர்களின் முன்னோர்களால் தில்லை கோயிலின் ராஜகோபுரங்கள் பழுதுபார்க்கப்பட்டது. கனகசபையில் பொன் முலாம் பூசப்பட்டது. திருச்சுற்றுகள் அமைக்கப்பட்டு, கிபி 1891ல் குடமுழுக்கு செய்யப்பட்டது. ( தில்லை சிற்றம்பலவன் கோயில்: பக் 23: சோம சுந்தரம் பிள்ளை)

" கிபி 1934ல் செட்டிநாட்டு வள்ளல் அண்ணாமலை செட்டியார் திருச்சித்திர கூடம் மற்றும் நாற்பது கால் மண்டபம் ஆகியவற்றிக்கு திருப்பணி செய்தார். சைவ மற்றும் வைணவர்களுக்கு இடையே ஏற்பட்ட விவாதங்களை தீர்த்துவைத்துள்ளார்.( தில்லை சிற்றம்பலவன் கோயில்: பக் 36: சோம சுந்தரம் பிள்ளை)

" கிபி 1955ல் நிலக்கிழார் இரத்தினசபாபதி பிள்ளை, இரத்தினசாமி செட்டியார் ஆகியோரின் தலைமையில் 64 ஆண்டுகள் கழித்து குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.( தில்லை சிற்றம்பலவன் கோயில்: பக் 25: சோம சுந்தரம் பிள்ளை)

தில்லை மூவாயிரவர் செப்பேடு : ( கிபி 1827)( திருப்பனந்தாள் காசிமட செப்பேடுகள்)
செய்தி : கிபி 1827 ல் தில்லையில் இரண்யவர்ம மகாராசர் காலத்தில் திருப்பணி செய்த இராசசபைக்கு நெடுங்காலமாக திருப்பணி செய்யப்படாமல் இருந்தது. இந்தத் திருப்பணியை முத்தையா தம்பிரான் என்பவர் செய்தார். தில்லை நடராசர் கோயிலின் பொறுப்பாளர்களாக " தம்பிரான் " என்பவர்கள் தொடர்ந்து இருந்துள்ளனர். முத்தையா தம்பிரான் திருப்பணி செய்து வரும் திறத்தைக் கண்டு வியந்த தில்லை மூவாயிரவர் தாங்களும் தங்களால் இயன்ற கொடையினை முத்தையா தம்பிரான் அவர்களுக்கு அளித்துள்ளனர். முத்தையா தம்பிரான் பரம்பரையாக இந்த திருப்பணியை செய்து வரும்படி இந்த கொடையை அளித்ததாக தில்லை மூவாயிரவர் குறிப்பிட்டுள்ளனர். இந்த செப்பேட்டிலும் பிச்சாவரம் குடும்பத்தினர் பற்றி எந்த குறிப்பும் காணப்படவில்லை.

முத்துத்தாண்டவர் கீர்த்தனை(16ஆம் நூற்றாண்டு)
தில்லை நடராசர் மீது பேரன்பு கொண்டவர் முத்துத்தாண்டவர். சீர்காழியில் பிறந்தவர். இவர் ஒரு சமயம் தில்லை நடராசரை தரிசிக்க வந்தபோது, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஒடியது. இதைக்கண்டு தில்லை நடராசரை தரிசிக்க இயலாமல் தனது வருத்தத்தை கீர்த்தனையாக பாடினார்.

" சேரன் சோழன் பாண்டியன் இரணியவர்மன் கோபுரமும் சூரவீரப்பபூபன் செய்த திருமதில்களும் பாருலகம் போற்றும் பஞ்சாட்சரப் படிகளும் காணாமல் வீணே காலம் கழித்தோமே"
என பாடினார்.( முத்துத்தாண்டவர் கீர்த்தனமும், பதமும்(1916)

இப்பாடலில் சேர சோழ பாண்டியன் மற்றும் இரணியவர்மன் ஆகியோர் தனித்தனியாக குறிப்பிடப்பட்டு உள்ளனர். இரணியவர்மர் வேறு சோழர் வேறு என்பதை தெளிவாக இப்பாடல் உணர்த்துகிறது.
மேலும் 16 ஆம் நூற்றாண்டில் தில்லையில் எந்த சோழ மன்னரும் ஆட்சியில் இல்லை என்பதால் இப்பாடலில் எந்த சோழ மன்னரும் குறிப்பிட்டு பாடப்படவில்லை.

மேலே குறிப்பிடப்பட்ட செப்பேடுகள் மற்றும் பிற வரலாற்று ஆவணங்கள் வெவ்வேறு கால இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நேரடியாக தில்லை நடராசர் கோயிலோடு தொடர்புடையவை. மராத்திய மன்னர்கள், பல கொடையாளிகள், கோயில் நிர்வாகத்தினர் என பலர் இந்த செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டு இருந்தும், தங்களை சோழ மன்னர் வழியினர் என்றும், சிதம்பரம் கோயிலின் பரம்பரை காவலர்கள் என்றும் கூறிக்கொண்டு இருக்கும் பிச்சாவரம் சூரப்பர்கள் பற்றி ஒரு சிறு குறிப்பும் கூட இல்லை என்பதை ஆழ நோக்க வேண்டும். தில்லை நடராசருக்கு ஆக்கிரமிப்பாளர்களால் பல காலங்கள் பூஜை நடைபெறாமல் தடைப்பட்டு இருந்தபோதும் , தில்லையை விட்டு நடராசர் பல ஆண்டுகள் புதுக்கோட்டை தொண்டைமான் சீமையிலும், மதுரையிலும் பாதுகாக்கப்பட்டு வந்தபோதும் அவரை மீட்க பிச்சாவரம் குடும்பத்தினர் எந்த முயற்சியும் எடுத்ததாக தகவல் இல்லை. தில்லை கோயிலுக்கு பல தரப்பினரும் கொடை அளித்த செய்திகளை நம்மால் காணமுடிகிறது. ஆனால் 600 ஆண்டுகள் தில்லையில் ஆட்சி செய்ததாக கூறிக்கொள்ளும் சூரப்பர் பற்றி எந்த குறிப்பும் இதுவரை கிடைக்கவே இல்லை. இவற்றை நோக்கும் போது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிச்சாவரத்தார்கள் தில்லை நடராசர் கோயிலின் சாவியை வைத்திருக்கும் உரிமையை பெற்று இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்களை அரச வம்சங்களோடு இணைத்துக் கூற ஆரம்பித்துள்ளனர் என்பது எளிதில் விளங்கும்.

தில்லையில் முடிசூட்டியது சோழர்கள் மட்டுமா?
************************************************

தில்லையில் முடிசூட்டுவதால் தாங்களே சோழ மன்னரின் வாரிசுகள் என கூறிவருகிறார்கள். பிச்சாவரம் சூரப்பர்கள்.

சோழர்கள் தில்லையில் முடிசூட்டியுள்ளனர் என்பதை மறுக்க இயலாது. ஆனால் சோழர்கள் மட்டும் தான் இங்கு முடிசூட்டிக் கொண்டார்களா?

பல்லவர் முடிபுனைதல்:-

பல்லவர் வழிவந்த இரண்யவர்மன் தில்லை அம்பலத்தில் முடிசூட்டிக்கொண்டதாக பழங்கால நூலான கோயிற்புராணம் எனும் நூல் உரைக்கிறது.
" காலை தொடங்கி நடந்து சடங்கு கணித்தோதும் வேலையின் மங்கல நீடஅபி ஷேகம் வியந்தாடி மூல முயங்கிய மாமுடி தார்முது வாள்பெற்றங்கு ஏல விருந்தபி னிட்டன ராண்டொன் றிரண்டென்று "

பொருள்: உதயகாலம் தொடங்கி ஒமம் நடந்து முடித்துச் சோதிடர்கள் கணித்த முகூர்த்தத்தில் மங்கலார்த்தமாய் இருக்கிற நவதீர்த்தங்களினால் மிக அபிடேகம் பண்ணி, பாரம்பரியமான மகத்தான மணிமகுடம், பழைய வீரகட்கம் வியாக்கிபாரதர் கையினாலே கொடுக்கப் பெற்று அந்த மண்டபத்திலே சிங்காதனத்தில் இருந்தார்" என கூறப்பட்டுள்ளது.

பாண்டியரின் வீராபிஷேகம் மற்றும் விஜயாபிஷேகம்:-

சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி காலத்தில் கிபி 1267ல் அவரது அரசியல் பிரதிநிதியாக சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்பவன் அரசாண்டான். இவன் தில்லைமாநகரில் உள்ள திருக்கோயிலில் சிவகாமக்கோட்டத்திற்கு தென்புறமுள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் வீராபிஷேகமும் விசயாபிஷேமும் செய்துக்கொண்டான். அவர் அபிஷேகங்கள் செய்துக்கொண்ட மண்டபம் வீரப்பாண்டியன் மண்டபம் என பெயர் பெற்றது.( பிற்கால பாண்டியர் வரலாறு : சதாசிவ பண்டாரத்தார் பக் 87)

வீரப்பாண்டியன் விக்கரம பாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்கள் பிற்காலத்தில் தில்லையில் பல திருப்பணிகள் செய்து தில்லைக்கோயிலில் தங்களது மகுடாபிஷேகத்தை நடத்தி வந்துள்ளனர். ( சிதம்பர ரகசியம் பாகம்:7)

இவற்றின் மூலம் நாம் அறிவது சோழர்கள் மட்டுமல்ல அப்பகுதியில் ஆட்சி புரியும் அனைத்து மன்னர்களுக்கும் தில்லையில் முடிசூட்டுதல் நடந்துள்ளது.

சோழர்கள் தில்லையில் மட்டும் தான் முடிசூட்டினார்களா?

சோழர்கள் தில்லையில் மட்டும் தான் முடிசூட்டுவது வழக்கம் என பொய்யுறைகள் தற்காலத்தில் பரப்பப்படுகிறது.

முதற்குலோத்துங்கன் என்னும் அநபாயனின் முன்னோர் முடிசூட்டிக்கொள்ளும் ஐம்பதிகளுள் ஒன்றாகச் சண்டீசர் பிறந்த சேய்ஞலூறும் ஒன்று என சேக்கிழார் பெருமான் பாடியுள்ளார். ஆதலால் சோழர்கள் முடிசூட்டும் 5 ஊர்களில் தில்லையும் ஒன்றே தவிர, தில்லையில் மட்டுமே சோழர்கள் முடிசூட்டுவர் என்பது கிடையாது.
சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் ( ஞானசம்பந்தன் 1999) (பக்கம் 441)

கிபி 1219 ல் சோழ தேசத்தின் மீது படையெடுத்த முதலாம் சுந்தரப்பாண்டியன் மூன்றாம் இராசராசனை வென்று திருவையாற்றில் சோழர்கள் முடிசூட்டும் ஆயிரத்தளி மண்டபத்தில் வீராபிஷேகம் செய்துக்கொண்டான்.( பிற்கால பாண்டியர் வரலாறு : சதாசிவ பண்டாரத்தார் பக் 87)

இவை நமக்கு உணர்த்துவது தில்லையில் சோழர்கள் மட்டுமில்லாது அப்பகுதியில் ஆட்சி புரிந்த மற்ற மன்னர்களும் முடிசூட்டியுள்ளனர் மற்றும் சோழர்கள் வழக்கமாக முடிசூட்டும் ஐந்து ஊர்களில் தில்லையும் ஒரு ஊரே தவிர தில்லையில் மட்டும் தான் சோழர் முடிசூட்டுவர் என்பது பொய்யுரை என விளங்கும்.

20 ஆம் நூற்றாண்டில்..
************************
13 ஆம் நூற்றாண்டில் முடிவுற்றது சோழப் பேரரசின் ஆளுமை. அதற்கு பிறகு 600 ஆண்டுகள் கழித்து கிபி 1908 ல் பிச்சாவரம் சூரப்ப வம்சத்தினர் முடிசூட்டுதல் நடத்துவதாக " பட்டாபிஷேக பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர். இதை உறுதி செய்யும் விதமாக எட்கர் தர்ஸ்டன் தன்னுடைய குறிப்பில் இரண்யவர்மர் வழியினர் என கூறிக்கொண்டு ஒரு பள்ளி குடும்பத்தார் முடிசூட்டுவதாக தெரிவித்துள்ளார்.

முடிசூட்டிய வெள்ளாழர்
**************************
கூற்றுவ நாயனார் எனும் களப்பிரர் காலத்தில் தில்லை வாழ் அந்தணர்களை தனக்கு முடிசூட்டுமாறு கேட்டதும் அவர்கள் முடிசூட்ட மறுத்து தங்களின் பூர்வீகமான சேர நாட்டுக்கு சென்றுவிட்டதை திருதொண்டர் புராணம் கூறுகிறது.(சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் ( ஞானசம்பந்தன் 1999) (பக்கம் 947).
அவர்கள் சென்றபின் தில்லையில் கிபி 6 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னரும், அதன் பின் பாண்டியர்களும் தில்லையில் பல்வகை அபிஷேகங்களை தங்களுக்கு செய்து கொண்டதை கண்டோம்.
இவர்களுக்கு பின் 20 ஆம் நூற்றாண்டில் முடி சூட்ட தொடங்கிய பிச்சாவரம் சூரப்ப குடும்பத்தினர், தில்லையில் உறவினர்களோடு கூடியிருக்க வெள்ளாழர் ஓருவர் இவர்களுக்கு முடியை தலையில் தரித்துள்ளனர். இந்த வெள்ளாழர்கள் பல்லவ மன்னர் இரண்யவர்மனின் அமைச்சர் வழிவந்தவர்கள் என தங்களை அழைத்துக்கொள்வதாக எட்கர் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.
முடிசூட்டும் விழாவின் முழு செலவையும் முடிசூட்டு விழா நடத்துபவர்களே ஏற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(Castes and tribes of southern india :1909 : edgor Thurston)
ஆக தில்லையில் தங்களது சொந்த செலவில் வெள்ளாழர்களைக் கொண்டு முடிசூட்டு விழாவை பிச்சாவரம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தில்லையில் முடிசூட்டுவதால் தாங்களே சோழ வாரிசு என சூரப்பர்கள் சொல்வது எவ்வகையில் ஏற்றுக்கொள்ளத்தக்கது???
இதுவரை பிச்சாவரத்தை ஆட்சி செய்ததாக சூரப்பர்களை பற்றிய எந்த ஆவணமும் இல்லை.

பிச்சாவரம் உண்மையில் ஜமீனாக இருந்ததா?
*************************************************
பிச்சாவரம் சூரப்ப குடும்பத்தினர், அப்பகுதியின் ஜமீன்தார் என பரப்புரைகள் செய்யப்படுகிறது.
ஆனால் பிச்சாவரம் சூரப்பரை குறிப்பிடும் எட்கர் தர்ஸ்டன் " At pichavaram 4 miles east of chidambaram lives a palli family" என்றே கூறுகிறார்.
பிச்சாவரத்தில் வாழும் ஒரு பள்ளி குடும்பம் முடி சூட்டுவதாக கூறியுள்ளாரே தவிர இவர்களை ஜமீன் என்று குறிப்பிடவில்லை.

வெள்ளையர் அளித்த Poligar பட்டம்:-

கிபி 1893 ல் பிச்சபுரம் சாமிதுரை சூரப்ப சோழ கோனார் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு மானியம் கேட்டு ஒரு கடிதம் எழுதினார். அதில் பல முக்கிய தகவல்கள் உள்ளது,அவையாவன:-

* கிபி 1828 ல் எழுதப்பட்ட உடன்படிக்கையில் வெள்ளையர்களால் சூரப்ப சோழனார் குடும்பத்திற்கு துமால் மானியமாக நஞ்சை நிலமும் பலவித வரும்படிகளும் அளிக்கப்பட்டு இருந்ததாகவும், இராமபத்திர சூரப்ப சோழனார் மரணத்திற்கு பிறகு மானிய நிலங்கள் ஜப்தி செய்யப்பட்டு பிரிட்டீஷ் அரசாங்கத்திடம் சேர்க்கப்பட்டுள்ளது. வரும்படிகளும் நிறுத்தப்பட்டுள்ளது

* அதன்பிறகு இராமபத்திர சூரப்ப சோழனாரின் மகன் ஆண்டியப்ப சூரப்ப சோழனார் அரசாங்கத்திடம் வாதாடி வரும்படிகளை மட்டுமாவது செய்தார்.

* ஆனால் ஆண்டியப்ப சூரனாரின் மரணத்திற்கு பிறகு அந்த வரும்படியும் நிறுத்தப்பட்டுள்ளது.

* ஆகையால் பாளையகீர் என அரசாங்கத்தால் பட்டம் அளிக்கப்பட்ட தங்களுக்கு வரும்படிகளை தொடர்ந்து அளிக்க வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் இவர்களின் கோரிக்கை பிரிட்டீசாரால் நிராகரிக்கப்பட்டது.

* தாங்கள் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், வாழ்க்கை நடத்த மிக கடினமாக உள்ளதாகவும் பிரிட்டீசாரிடம் பரிதாபமாக கோரிக்கை வைத்துள்ளனர்.
சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு : நடனகாசிநாதன் ( பக் 90-91)/ District munsif's record, chidambaram D.S.NO 205 OF 1930)

காவல்கார்(Kavalgar)

பிச்சாவரம் சூரப்பர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கிபி 1844 ல் தங்களது பென்சன் தொகையை உயர்த்த சொல்லி பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர்களின் பென்சன் தொகையை உயர்த்தி அரசு வெளியிட்ட அறிக்கையில் இவர்களை காவல்காரர் ( Kavalgar) என்றே குறித்துள்னர். இவர்களை எங்கும் ஜமீன் என குறிப்பிடவில்லை. வெள்ளையர் காலத்தில் பல பகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட அரசு காவல்காரர்களில் பிச்சாவரம் குடும்பத்தினரும் ஒருவர் என இந்த அறிக்கை நமக்கு விளக்குகிறது.
:-சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு நடனகாசிநாதன் ( பக் 88)

பிச்சாவரம் சூரப்ப சோழனார்கள் பிரிட்டீஷ் காலத்தில் பிச்சாவரம் பகுதியில் காவல் உரிமை பெற்று வெள்ளையர்களால் Cavalgar என்றும் பாளீயகர் என்றும் பட்டம் பெற்றுள்ளனர். பிரிட்டீசாரால் மானிய நிலங்கள் அளிக்கப்பட்டு பிற்காலத்தில் அவை பறிக்கப்பட்டுள்ளது. இவர்களை இப்பகுதியின் ஆட்சியாளர்களாகவோ, மன்னர்களாகவோ குறிப்பிடும் எந்த ஆவணமும் இல்லை. பிச்சாவரம் காவல்காரர்களாக இருந்து வெள்ளையரிடம் இருந்து நிலத்தை பெற்று பிறகு அதையும் இழந்த பிச்சாவர குடும்பத்தினர் தங்களை ஜ௴ன் என்றும் மன்னர் என்றும் பொய்யுரை பரப்புவது ஏனோ? கிபி 1828 க்கு முன் பிச்சாவரத்தில் சூரப்பர் எனும் குடும்பத்தினர் இருந்ததற்கே எந்த ஆதாரமும் இதுவரை இல்லை.

" சூரப்ப" என்பது யாதெனில்:-
*****************************

பிச்சாவரம் சூரப்ப சோழனார்கள் தங்களது பெயரோடு சூரப்ப என்ற சொல்லையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். சூரப்பா எனும் பெயரை எதனால் இந்த குடும்பத்தினர் பயன்படுத்தி என்பதை திரு.நடனகாசிநாதன் என்பவர் தனது நூலில் விளக்கியுள்ளார். அதனைக் காண்போம்.

" மகாமண்டலேஸ்வரன் சூரப்பராஜன் எனும் சிற்றரசன் ஆந்திர நாட்டில் வீரக்கொட்டா எனும் பகுதியில் இருந்து அரசாண்டுள்ளான். இவர் தம்மை பரத்வாஜ கோத்திரத்தான் என்றும், கட்வாங்கேதனன், என்றும் ரிஷப லாஞ்சனன் என்றும் காஞ்சிபுரேஷ்வரன் என்றும் குறிப்பிட்டுள்ளார்". ( SII vol 07 No 1327)

பரத்துவாஜ கோத்திரம் என இந்த மன்னர் தன்னை குறிப்பிட்டதால், இரண்யவர்மன் வழியினர் என தங்களை பிற்காலத்தில் அழைத்துக்கொண்ட பிச்சாவரம் சூரப்பர்கள் இந்த குறுநிலமன்னர் வழிவந்தவர் என்பதை குறிக்க சூரப்ப எனும் அடைமொழியை தொடர்ந்து பயன்படுத்தி வருவதை காணலாம். சேலம் மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் செப்பு பட்டயங்களில் தொண்டை மண்டல சோழ கோனார் என குறிப்புகள் காணப்படுகிறது. ஆகையால் தொண்டை மண்டல பகுதியில் ஆட்சி செய்த தெலுங்கு குறுநில அரசர்களான சூரப்பராசாக்கள் வழிவந்தவர்களாக பிச்சாவரம் சூரப்ப சோழனார் குடும்பத்தினர் இருக்கக்கூடும் என தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் தனது ஆய்வு முடிவை கூறியுள்ளார்.
:-சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு நடனகாசிநாதன் ( பக் 28-29)

இவரது கூற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் இன்றும் சூரப்பா எனும் பட்டப்பெயர் கர்நாடகாவில் உபயோக்கப் படுத்தப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது நாம் அறிந்தே.

திருமண உறவுகளும் வடுகர் வாடையும் :-
******************************************

பிச்சாவரம் குடும்பத்தினர் தங்களது மண உறவை பெரும்பாலும் அரியலூர், உடையார்பாளையம் , வடகால் குடும்பத்தினரோடு கொண்டிருந்துள்ளனர்.

ஆண்டியப்ப சூரப்ப சோழனாரின் மகள் ஜெயகுமாரியை அரியலூர் பாளையக்காரருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.( வடபகுதி பாளையக்காரர் வரலாறு / பக்155/ நடன காசிநாதன்)

20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிச்சவரம் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை வடகால் பகுதியை சேர்ந்த ராவுத்த மிண்ட நயினாருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.( வடபகுதி பாளையக்காரர் வரலாறு / பக்155/ நடன காசிநாதன்)

பிச்சாவரத்தை சேர்ந்த ஆண்டியப்ப சூரப்ப சோழனார் மற்றும் அவரது மகன் சிதம்பர சூரப்ப சோழனார் உடையார்பாளையம் பாளையக்காரரிடம் திருமண சமந்தம் வைத்துள்ளனர்.( வடபகுதி பாளையக்காரர் வரலாறு / பக்156/ நடன காசிநாதன்).

பிச்சாவரத்தார் திருமண உறவு வைத்திருந்த குடும்பத்தார்களின் பூர்வீகம் பற்றி திரு நடனகாசி நாதன் அவர்கள் தனது நூலான வடபகுதி பாளையக்காரர்கள் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் இவர்கள் தமிழரா என்றா வினாவினை எழுப்பியுள்ளது.

அரியலூர் பாளையமும் பூர்வீகமும்:

பிச்சாவரம் குடும்பத்தினர் மண உறவு கொண்டவர்களில் முக்கியமானவர்கள் அரியலூர் குடும்பத்தினர். அரியலூர் பாளையக்காரர்கள் தங்களது பூர்வீகம் பற்றி கூறியிருப்பதாவது:-
" ஆதிகாலத்தில் வடக்கு ராஜ்ஜியத்தில் ஆனைகுந்தி சமஸ்தானத்தில் உள்ள குன்ன நகரம் எனும் ஊரில் இந்த வம்சத்தார் ஒருவர் பாளையக்காரராக இருந்துள்ளார். ஆனைகுந்தி என்பது கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். திருச்சி துறையூர் பாளையக்காரர்களான ரெட்டியார் முதலிய பெரும்பான்மை தெலுங்கு பாளையக்காரர்கள் தங்களது பூர்வீகமாக ஆனைகுந்தியையே குறித்துள்ளனர். இவர்கள் வம்சத்தில் உதித்த பூம நயினார், ராம நயினார் ஆகியோரை கிபி 1308ல் விசயநகர மன்னர் , கோடிகம் நாகம நாயக்கர் என்பவரோடு தமிழகத்துக்கு அனுப்பியுள்ளார். நாகம நாயக்கரோடு தமிழகம் வந்த நயினார்கள், நாகம நாயக்கரின் முடிசூட்டு விழா முடிந்து கர்நாடகத்துக்கு திரும்பிக்கொண்டு இருந்தபோது ஒரிடத்தில் ஒய்வு எடுத்தனர். அப்போது ராம நயினார் கனவில் தோன்றிய கிராம தேவதை அந்த பகுதியில் இருந்த காட்டை அழித்து நகரத்தை உண்டாக்கினால் தாமே அவர்களின் குலதெய்வமாய் இருந்து காப்பாற்றுவேன் எனக் கூறி, அவர்கள் வம்சத்தில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு ஒப்பிலியம்மா எனும் தனது பெயரை சூட்டுமாறு அறிவுறுத்தி மறைந்தது. இறைவியின் வேண்டுகோளின்படி காட்டை அழித்து நகரம் உண்டாக்கியபின் இராம நயினார் கன்னட தேசம் என்று நடந்த சம்பவங்களை கூறினார். இதைக்கேட்டு மகிழ்ந்த விசய நகர மன்னர், ராம நயினாருக்கு ராம ஒப்பில்லா மழவராயர் எனும் விருதுப்பெயரை அளித்து , பல பரிசுப்பொருட்களையும் அளித்து, அரியலூர் பகுதிக்கு சுபேதாராக இருக்கும்படி விசய நகர மன்னரால் நியமிக்கப்பட்டார்.

விசய நகர மன்னர் அளித்த மழவராயர் பட்டம்:-
கர்நாடக தேசத்தில் ஆனைகொந்தியில் அரியலூரின் சுபேதாராக பொறுப்பேற்ற நயினார் அரியலூரில் வந்து வாழ ஆரம்பித்தார். கிபி 1326ல் விசயநகர மன்னரை எதிர்த்து இரண்டாம் பிரதாப ருத்திரன் என்பவன் போரிட்டான். அந்த சமயத்தில் விசய நகர மன்னருக்கு உதவிய சுபேதார்களில் ஒருவரான ராம நயினாருக்கு ரண விஜய ஒப்பில்லா மழவராயர் எனும் பட்டத்தை அளித்து பாராட்டினார். அரியலூர் பாளையத்தாரின் முதல் இரண்டு பாளையக்காரர்கள் ராம நயினார், பூமி நயினார் என்றே தங்களை அழைத்து வந்தனர். இவர்களுக்கு அடுத்து வந்தவர்களே விஜய நகர மன்னர் அளித்த மழவராயர் பட்டத்தை பயன்படுத்த தொடங்கியிருப்பது எளிதில் விளங்கும்.

( வடபகுதி பாளையக்காரர்கள் வரலாறு: நடன காசி நாதன் பக்7-10)/ அரியலூர் பாளையக்காரர் கைபீடு)

பிச்சாவரம் குடும்பத்தாரின் மற்றொரு சமந்தக்காரர்களான வடகால் பகுதி குடும்பத்தினரும் அரியலூர் வம்சத்தைப்போல நயினார் எனும் பட்டத்தையே பயன்படுத்தி வந்துள்ளார். இவர்களும் அரியலூர் நயினார் வம்சத்தின் கால் வழியினராக இருக்கலாம்.

உடையார்பாளையம் வம்சமும் பூர்வீகமும்:-

பிச்சாவரம் குடும்பத்தார் உடையார்பாளையம் குடும்பத்தாரிடம் தொடர்ச்சியான கொள்வினை கொடுப்பினையில் இருந்துள்ளனர். இவர்களின் பூர்வீகம் பற்றி காண்போம்:

கிபி 16 ஆம் நூற்றாண்டில் விஜய நகர வேந்தரான வீர நரசிம்மர், சாளுவ குலத்தவர்களான தனது உறவினர்களை தமிழகத்தின் பல பகுதிகளில் ஆட்சியில் அமர்த்தினார். அதன்படி செஞ்சிக்கு அதிபதியாக நியமிக்கப்பட்ட உதயகிரி ராமபத்திர நாயக்கருக்கு உதவியாளராக இருக்கும்படி ரங்கப்பட உடையார் என்பவரை நியமித்தார். இவருக்கு குன்னத்தை சுற்றியிருந்த பகுதிகள் ஜாகீராக அளிக்கப்பட்டது.
( வடபகுதி பாளையக்காரர்கள் வரலாறு: நடன காசி நாதன் பக் 81)

இந்த பாளையக்காரர்கள் தங்களை " பார்க்க கோத்திரம்" என்றும் கங்கநூஜா" குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் குறித்துள்ளனர்.
( வடபகுதி பாளையக்காரர்கள் வரலாறு: நடன காசி நாதன் பக் 101)

உடையார்பாளையம் பாளையக்காரர்கள் தங்களது பூர்வீகம் பற்றிய வரலாற்று நூலில் தங்களது குடும்பப் பெயர் பல்லவாரு என்றும், பூர்வீகம் கர்நாடகம் என்றும் தங்களது ஆதியை குறித்துள்ளனர். கர்நாடகத்தில் இருந்து வந்த திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி ரங்கராஜர் வம்சாவளி நூல் தங்களது முன்னோர் கர்நாடகத்தில் இருந்த போது தம்மிடி பல்லவாரு என குடும்பப் பெயரை பெற்றிருந்ததாக கூறுகின்றனர்.
( வடபகுதி பாளையக்காரர்கள் வரலாறு: நடன காசிநாதன் பக் 117)

உடையார்பாளையம் குடும்பத்தினர் இன்று வரை தெலுங்கு தாய்மொழியாக கொண்டு பேசி வருவதாக தமிழக அரசின் ஆவணமே கூறுகிறது.http://www.tn.gov.in/dtp/CCBP/Udayarpalayam.pdf

பிச்சாவரம் குடும்பத்தினரும் தங்களை விஜய நகர மன்னர் கால தெலுங்கு பாளையக்காரர் சூரப்பராஜன் வழிவந்தவராக இருக்கலாம் என தொல்லியல் அறிஞர் திரு நடனகாசிநாதன் குறிப்பிட்டு இருப்பது உற்று நோக்கவல்லது.

இவற்றால் நாம் அறிவது பிச்சாவரத்து குடும்பத்தார்கள் தங்களை
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பரத்துவாஜ கோத்திரமான பல்லவர்களின் வம்சம் என அழைத்துக்கொள்ள ஆரம்பித்தனர். அதிலிருந்து சிறிது காலத்தில் தங்களை காசிப கோத்திரத்தில் உதித்த சோழர்கள் என்றும் கூறலாயினர். அதே நேரத்தில் தங்களை அக்னிக் கோத்திரம் என்றும் கூறிவருகின்றனர். அக்னி கோத்திரத்தில் உதித்து பரத்துவாஜ கோத்திர பல்லவர்களாகவும், காசிப கோத்திரத்தில் உதித்த சோழர்களாகவும் தங்களை கூறி வரும் பிச்சாவர குடும்பத்தார்கள் உண்மையில் தாங்கள் எந்த கோத்திரம் என அவர்கள்தான் விளக்க வேண்டும்!

சோழப் பேரரசு மறைந்து கிட்டதட்ட 600 ஆண்டுகள் கழிந்த பின்னால் 20 ஆம் நூற்றாண்டில் கிடைத்த வாயப்பை பயன்படுத்தி தங்களை சோழர் வாரிசு என கூறிக்கொள்ளும் பிச்சாவரத்தார்களால், கிபி 14- 19 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அப்பகுதியின் ஆட்சியாளர்களாகவோ அல்லது வேறேதும் கோயில்களுக்கு கொடை அளித்தததாகவோ கூறும் எந்த ஆதாரமும் இல்லை. இடைக்காலங்களில் தில்லை நடராசர் கோயில் தொடர்பான வரலாற்று ஆவணங்கள் எதிலுமே, அப்பகுதியில் சோழர்கள் வாழ்ந்ததாகவோ, ஆட்சி செய்தததாகவோ, முடி சூட்டிக் கொண்டதாகவோ எந்த குறிப்பும் இல்லை. தில்லையில் 20 ஆம் நூற்றாண்டில் வெள்ளாளர்களைக் கொண்டு முடிசூட்டும் படலத்தை ஆரம்பித்து இன்று ஊடகங்களின் துணையோடு சோழ வம்சம் என தங்களை கூறிக்கொள்ளும் பிச்சாவரத்தார்கள் தான் அனைத்து வரலாற்று முடிச்சுகளுக்கும் விடையளிக்க வேண்டும்.

கேள்விகளுடன்

சியாம் சுந்தர் சம்பட்டியார்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்